பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

155


தான சிறிய புனத்தில் வளர்ந்து நிற்கம் குறுகிய கிளைகளைக் கொண்ட குரா மரத்தின் குவிந்த கொத்தில் உள்ள வெண்ணிற மலர்கள், ஆடுகளை மேய்க்கும் இடைமகன் அணிந்து மகிழும் வண்ணம் மலரும்".

"கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவியிணர் வான்பூ
ஆடுடை இடையன் சூடப் பூக்கும்"
               - நற்றிணை : 266 : 1-3

பாறைபடுதயிர் என்பதுபோல் நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போலும் மெத்தென்ற கையால், தயிர்க்கறை போகக் கழுவிய கையினால் மட்டுமே தொடத் தக்கதான உயர்ந்த ஆடையைக், கணவனுக்காம் உணவை விரைந்து முடிக்கும் ஆர்வ மிகுதியால், கழுவாமேலே எடுத்து உடுத்துக் கொண்டு, குவளை மலர் போன்ற மை உண்ட கண்களுள் தாளிப்புப் புகை புகுந்து தாக்க, தானே சமைத்து முடித்த புளிக்குழம்பைக் கணவன், இனிது இனிது எனக் கூறியவாறே மகிழ்ந்து உண்ணக் கண்ட அவ்விளமகளின் ஒளிவீசும் முகம் புறத்தே புலனாகாவாறு அகத்துக்குள்ளாகவே. அகமிக மகிழும்".

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் ,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத் ,
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."
               -குறுந்தொகை : 167

"தோழி! மதுவை நிரப்பிவைத்திருக்கும் நீலக் குப்பிகளைப் போன்ற குறுகிய வாயையுடைய சுனைகளில் வாழும் பிளந்த வாயையுடைய தேரைகள், கிளியோட்டும் கருவியாகிய தட்டைப்பறை ஒலிபோல் ஓயாது ஒலிக்கும், நாட்டுக்கு உரியவனாகிய நம் காதலன், களவுக்காலமாகிய பழைய திங்களில், முழுமதி நிலவொளியில் என் தோளை ஆரத்