பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

163


அரும்பணைப் பொதியில்" (அகம்: 251:8) நகரங்கள் எழுந்ததும், அரசர்கள், முதலில் ஒரு பொதுக்குடிசையை, அடுத்து, ஒரு பொது வீட்டை அல்லது நகர் அரங்கைக் கட்டினார்கள். அவையும் பண்டைப் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அதில், கந்து அல்லது கந்தம் எனப்படும் மரக் கிளை நடப்பட்டு, அம்மரத்துண்டில் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படும் கடவுள், தண்ணுமை முழக்கத்திற்கிடையே வழிபடப் பெறும். "பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை" (புறம் : 89:7). இவ்வரங்குகளில், ஆரியர்களிடையே, நிகழ்ந்தது போலவே, பண்டைக் காலத்தில் சமய நிகழ்ச்சிகளோடு நடைபெற்றதான சூதாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. கீழ்வரும் பாட்டு, அவ்வாறு பாழுற்றுக் கைவிடப்பட்ட ஒரு கோயில் பற்றிய விளக்கமாம். "வீடுதோறும் மீன் சுடுதலால் புலால் நாற்றத்தோடு கலந்து எழும் புகையின் நீண்ட ஒழுங்கு, வயலருகே நிற்கும் மருதமரத்து வளைந்த கோடுகளில் சென்று சூழ்ந்து கொள்ளும் பெரிய வருவாய் இப்போது இல்லையாகிப் போகவே, முழவு முதலாயின முழங்க, பலியிட்டு வழிபட்ட கடவுள் எல்லாம், தாம் குடியிருந்த கந்தகங்களை விட்டுப் போய்விட்டன. அதனால் பாழுற்றுப் போன ஊர் மன்றங்களில் பண்டெல்லாம், நரைதிரையுற்ற முதியோர் ஓய்வாக அமர்ந்து சூதாடுங்கால், சூதாடுகருவிகள் வீழ்ந்து வீழ்ந்து பண்ணிவிட்ட குழிகள், உடலெல்லாம் புள்ளிகளைக் கொண்ட காட்டுக் கோழிகள் இட்ட முட்டைகளால் நிறைந்துவிடும்"

"மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின். வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்,
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லில் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனம்"
                          புறம் - 52-9-16;