பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தமிழர் பண்பாடு


வளராவாடை உளர்புநனி தீண்டலின்,
வேழ வெண்பூ விரிவான பலவுடன்
வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய,
மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பதுபோல் விளங்குபு அறைய
எல்லை போகிய பொழுதின் எல்உறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமம்”.
                - நற்றிணை : 241 : 1-10

என்றாலும், மக்கள் பெருவாரியாக, அதைக் கடந்து செல்ல வேண்டியிருந்தும், பாலை, பெரிதும் , பாழுற்றே இருந்தது. ‘'பாலை வழியைக் கடந்து செல்லும் மக்கள், அறுத்துப்போட்ட பிரண்டைக் கொடி, இடியால் தாக்குண்டு சிதறுண்ட பசிய பாம்பின் துண்டுகள் போல வழியருகே வறிதே வீழ்ந்து கிடக்கும் அப்பாலைக் காட்டில், உப்பு வணிகர் கூட்டம் விட்டுப் போன கல் அடுப்பில், வலிய வில்லையுடைய ஆறலை கள்வர், ஊனை, மணம் உண்டாகப் புழுக்கி உண்பர்”,

“ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறுபெறு பாம்பின் பைந்துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறிகொள
உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பின்
நோன்சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்”.
                           அகம் : 179 : 5-9.


ஆடுமாடுகளின் மேய்புலமாம் முல்லை நிலம்

வாழ்வதற்கு நன்மிக இனிய இடம் முல்லை . "மழை கால் இறங்கிப் பெய்யும் மழைப் பருவத்துப், பெருமழை பெய்து ஓய்ந்த கடைசி நாளன்று, பனைநார் கொண்டு பல காலிட்டுப் பின்னிய மெல்லிய உறி, பால்பானையோடு ஒரு கையில் தொங்க, தீக்கடைகோல் முதலாம் கருவிகளை ஒரு சேர இட்டுச் சுருக்கிய தோல் பையையும், மழைக்கு மறைப்பாகும் பனை ஓலையாலான குடையையும் முதுகில் கட்டிக் கொண்டு, பால்விலை கூறி விற்றுச் செல்லும் இடையன்,