பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை

21


மேற்கொண்டுவிடவே மறம் என்ற சொல், கொடுமை எனும் பொருள் குறிப்பதாகவும், கள்வர் என்ற சொல், திருடர் எனும் பொருள் குறிப்பதாகவும் மாறி விட்டன.

ஆனால் தொடக்க நிலையில் மனிதர், வீரச் செயல் புரிவதில் தமக்குள்ள ஆர்வம் காரணமாகவே பாலைநில வாழ்வை மேற்கொண்டனர். ஆடவர் பாலைவனத்தில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, மகளிரும், குழந்தைகளும், குடும்ப வாழ்வில் என்னென்ன வசதி வாய்ப்புகள் கிடைத்தனவோ அவற்றை அனுபவித்து மகிழக் கலந்து வாழ்ந்து வந்தனராகவே, இந்நிலத்து வாழ்க்கை, பழங்குடி மக்கள் வாழ்வில், குடும்பத் தலைமை, மகளிரிடத்தில் அமையும் தாய்வழி ஆட்சி முறையை வற்புறுத்துவதாய் அமைந்துவிட்டது.

ஆயர்

குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்கால கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் வாழ்வில் பண்டே பழக்கப்பட்டு, வேட்டை ஆடுவார்க்குப் பெரிதும் பயன்பட்ட நாயையும் வளர்த்துப் பயன்கொள்வதாய, மனித நாகரீக முன்னேற்றத்தின் அடுத்த பெருநிலையை எட்டிப் பிடித்தனர்.

இது, மனித வாழ்க்கை முன்னேற்றமாம், ஏணியில் இரண்டாம் படிக்கு, அதாவது மேய்ச்சல் நாகரீகத்திற்குக் , கொண்டு சென்றது. முல்லையில், கால்நடைகள், விரைவாகப் பெருகின. பழங்குடி வாழ்விலிருந்து, குடும்ப வாழ்வுமுறை முகிழ்த்ததற்கு, எந்தத் தனியுடைமை தத்துவமுறை துணை செய்ததோ, அத்தத்துவமுறை, கால்நடைச் செல்வப் பெருக்கால் உருப்பெறலாயிற்று.

முதல் காட்சியிலேயே காதலர் ஒன்றுபடுதல், திருமணச்