உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்த நூல்: ஒரு அறிமுகம்

பாப்பிரஸ் தாள் ஒன்றில் எழுதப்பட்டுள்ள மிகப் புராதனமான ஒரு இந்திய எழுத்துப் பிரதி, ஏரெவான் நகரில் உள்ள, எழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்கும் இடமான மாட்டனடாரனில் கண்ணாடிக்குள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அதைப் பார்வையிடுகிறார்கள். 1977-ல் இலையுதிர்காலத்தின்போது ஆர்மேனிய எழுத்தாளர் சங்கக் கட்டடத்தில் சோவியத்-இந்திய எழுத்தாளர் கருத்தரங்கு ஒன்று நிகழ்ந்தது. சமகால இலக்கியம், மற்றும் இரு நாட்டினருக்கும் ஆர்வம் அளிக்கும் இதர விஷயங்கள் பற்றிய முக்கியப் பிரச்சினைகளில் அது கவனம் செலுத்தியது. இந்தியா, ஆர்மேனியா. மற்றும் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த அநேக எழுத்தாளர்களும் அறிஞர்களும் அக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். ஒருபுறம், பன்னெடுங்காலமாக இருந்துவருகிற ஒரு இந்தியக் கையெழுத்துப் பிரதி ஆர்மேனிய மக்களின் மிகப் புராதனமான இலக்கியச் செல்வங்களோடு சேர்த்து மாட்டனடாரனில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இன்னொரு பக்கத்தில், ஆர்மேனிய-இந்தியச் சமகால எழுத்தாளர்களின் இலக்கியப் பேச்சு நிகழ்கிறது. இவ் இரண்டும் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பல நூற்றாண்டுகளாக நீடித்து இன்றும் நிலை பெற்றிருக்கிற நட்புறலின் குறியீடாகவே தோன்றுகின்றன.

இந்தியாவின் வளமான இலக்கியமும், மிகுந்த வளம் பொருந்திய நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் காலப்போக்கில் ஆர்மேனிய எழுத்தாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்திருக்கின்றன. புராதன ஆர்மேனிய இலக்கியத்தின் பிரதிநிதிகளான ஹோவன்னஸ் டூமேனியன், அவெதிக் இஸாகியன், வெர்டானெஸ் பாபாஸியன், வாஹன் டெரியன், வாஹன் டாட்வென்ட்ஸ் போன்றோர் இந்திய இலக்கியம் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும் மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார்கள். 1925-ல் அலெதிக் இஸாகியன், வெனிஸ் நகரத்தில் கவி ரவீந்திரநாத தாகூரை நேரில் கண்டு பேசினார். உரையாடல்களையும், 'ஆனந்தரும் மரணமும், ஒரு பறவை உருவத்தில் புத்தர்', 'உஷினாரா”,