வி. பெத்ரோசியன்
127
அவன் அம்மாவின் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தாக்கை நோக்கி ஒரு சிறிய பாதை சென்றது. அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கிப் பார்ப்பதற்கு தனக்கு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான். அவனுடைய பள்ளிக்கூடம் அந்தப் பாதையில், பள்ளத்தாக்கிற்கு நேரே முகட்டின்மீது இருந்தது. மாரிக்காலத்தில் பள்ளிக்குச் செல்வது சிரமமாக இருக்கும். பாதை மறைந்துவிடும். அவர்களிடம் ஒரு நாய் இருந்தது. அதன் பெயர் என்ன? அது அவனோடு எப்போதும் பள்ளிக்கு வரும். அது நல்ல நாய். சில சமயம் அவன் தன் பள்ளிக்கூடப் பையை அந்த நாயின் முதுகில் கட்டி விடுவான். அதை அது சுமந்து செல்லும். “உன் நாய் ஏழாம் வகுப்புக் கல்விப் பயிற்சி பெற்றதா?” என்று அவன் சகோதரன் ஒரு தடவை கேலி செய்தான்.
மிஸ் மேரியின் விரல்கள் மெல்லிசாய், ஒளி ஊடுருவக்கூடிய அளவு தெளிவாக இருந்தன. அவள் ஏன் அன்று இத்தாலிய விடுதியில் வருத்தம் அடைந்தாள்? “நீங்கள், கீழ்திசை மக்கள் மனிதவர்க்கத்தின் குழந்தைப் பருவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் நெகிழ்ச்சி அடைகிறீர்கள்; மற்றவர்களின் துயரங்களுக்கு செவிசாய்க்கிறீர்கள்; உடனே அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்று நினைக்கிறீர்கள்.” மிஸ் மேரியின் கிளினிக் ஒரு மில்லியன் டாலர் மதிப்புப் பெற்றதாகும்.
அம்மாவின் உடைகள் இருந்த அலமாரியின் கதவில் போட்டோக்கள் காணப்பட்டன. முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பதில் படங்கள் இருந்தன. அம்மா அந்தக் கண்ணாடியை நீக்கி விட்டுச் சாதாக் கண்ணாடி பொருத்தி, அதன் பின்னால் படங்களை வைத்திருந்தாள். அவற்றை அவன் ஒவ்வொன்றாய்ப் பார்த்தான். அவன் சகோதரியின் முகச்சாடை இனம் காண முடியாத அளவு மாறியிருந்தது. அவன் முகம் உள்ளிருந்து இளகிவிட்டது. அவன் அக்காளுக்கு நீலக் கண்கள் என்று அம்மா சொன்னதை நினைத்தான். கிராமத்தின் பேரழகியாக அவள் கருதப்பட்டாள். ஒரே ஒரு காட்சி மட்டும் அவன் மனசில் பதிந்து, இன்னும் பசுமையாக இருந்தது. அவன் அத்தான் இராணுவத்தில் சேர்வதற்காகப் பிரிந்து போன நிகழ்ச்சி. அக்கா தன் கணவனை வழி அனுப்புவதற்காக அவனையும் ரயில் நிலையத்துக்கு அழைத்துப்போயிருந்தாள். அவன் பெயர் ஹாருதூன். அவர்கள் மூவரும் சேர்ந்து நின்றதை அவன் நினைத்தான். இரண்டு மாதங்களில் யுத்தம் தொடங்கிவிடும்; அதன் ஆரம்பத்திலேயே ஹாருதூன் இறந்துபோவான் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அவள் ஒரு வருஷத்தில் செத்துவிடுவாள்; அவளுள்