உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூஷேக் கால்ஷோயன்

141

 தான். வீட்டுக்காரன் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, தன் மனைவி அருகில் உட்கார்ந்தான். ஸோரோ பாடியவாறே இருந்தான். மகன், ஆட்டுத் தோல்களிலும் சிறு பீப்பாக்களிலும் நிரப்பிய ஒயினை எடுத்துப்போய், வண்டியில் வைத்துவிட்டு, திரும்பிவந்து நிலவறையின் நடுவில் நின்றான். ஸோரோ தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான். பித்தளைப் பாத்திரம் ஏற்கெனவே காலியாகியிருந்தது. பாடும்பொழுதே அவன் கடைசிப் பாத்திர ஒயினைச் சிந்திவிட்டான். தன்னைத் தலை முதல் கால் வரை ஒயினால் நனைத்துக்கொண்டதை அவன் உணரவேயில்லை.

“ஒ, அலெஹ்!” என்று அவன் பாட்டை ஆரம்பித்தது போலவே முடித்தான். கண்களைத் திறந்தான். ஆனால் அவன் யாரையும் பார்க்கவில்லை. சித்தம் கலங்கிய அலெஹை, சிரித்துக்கொண்டிருந்த வீட்டுக்காரனை, பக்கத்தில் நின்ற மகனை, எவரையும் பார்க்கவில்லை. மகன், அவன் கையிலிருந்த பித்தளைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் புஜத்தை இறுகப் பற்றினான்.

“நாம் போவோம், அப்பா!”

ஸோரோ தன் புஜத்தை விடுவித்துக்கொண்டு சுவரோடு உறுதியாக ஒட்டிக்கொண்டான்.

“மாராதுக் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன், நான் இங்கேயிருந்து நகரமாட்டேன். அலெஹ்...”

அவர்கள் வீட்டுக்குள் போகலாம் என்றும், அங்கே ஸோரோ படுத்து சிறிது ஓய்வு பெறலாம் என்றும் வீட்டுக்காரன் யோசனை கூறினான்.

“ஓ, என் கண்களுக்கு இனி தூக்கம் கிடையாது”. அவன் முஷ்டியால் கண்களைக் கசக்கினான். “அலெஹ்!” என்று கூப்பிட்டான். “நீ எங்கேபோய் மறைந்தாய்?”

அவன் மகன் திரும்பவும் அவனைப் பிடித்து இழுத்தான். அவனோ மகனை அப்பால் தள்ளிவிட்டு அவனை ஏசினான். வீட்டுக்காரனுக்கும் எரிச்சல் தந்தான். குழந்தை மாதிரி சுவரைப் பற்றிக்கொண்டு, அங்கிருந்து நகர விரும்பவில்லை அவன். இடையிடையே “அலெஹ்...!” என்று கூப்பிட்டவாறு இருந்தான்.

வீட்டுக்காரன் அவனைச் சரியான முறையில் கண்டித்தான்.

“நீ என்னை வெளியே துரத்துகிறாய், இல்லையா?” ஸோரோ குரலை உயர்த்திக் கூப்பாடு போட்டான். இன்னும் சுவரை