38
ஆல்ப் மலை வயலட் பூ
பாதங்களைப்போல் செக்கச் சிவந்த தண்டுடன் விளங்குகிறது. அம் மலர் இடிபாடுகளுக்கிடையே பூக்கிறது. இருண்ட கோட்டைச் சுவர்கள்மீது மேகங்கள் தாழ்ந்து படிந்திருக்கும் போது, புஷ்பம் தன் தலையை வெயினால் உலர்ந்த பாறை ஒன்றின்மீது வைத்துக்கொள்வதற்கு வசதியாக அதன் தண்டு வளைந்து தணிகிறது. மகரந்தத்தில் குளிக்கிற பிரகாசமான வண்டு ஒன்று அந்தப் பூவை ஒரு ஊஞ்சலாகவும் உலகத்தை ஒரு செந்நிறப் புஷ்பமாகவும் காண்கிறது.
ரொம்பவும் கீழே, பள்ளத்தாக்கில் பாசட் நதியின் எதிர்க்கரையில், அநேக குடிசைகள் இருக்கின்றன. காலை வேளையில், கூரைகளில் உள்ள வட்டத் திறப்புகளின் வழியே புகைத் தூண்கள் மேலெழுகின்றன. அவை நீல நாடாக்களாக உருமாறி மேகங்களிடையே மறைகின்றன. நன்பகலின் உஷ்ணத்தில், கிராமத்தில் ஒரு சேவல் கூவக்கூடும். ஒரு கிழக் குடியானவன் தன் வீட்டின் நிழலில் கொட்டாவி விட்டபடி, தனது பழைய நினைவுகளில் ஆழ்ந்து, மணலில் ஒரு குச்சியால் உருவங்களைத் தீட்டுகிறான்.
கீழே கிராமத்திலும் மேலே கோட்டையிலும் காலம் மெதுவாக நகர்கிறது. ஒரு மரத்தின் மாறுகின்ற இலைகளைப் போல் வருஷங்கள் அமைகின்றன. நினைவுகள் குழம்புகின்றன. இப்போது, எப்போதும் போலவே ஆறு வேகமாக ஓடுகிறது. மேலே அதே பாறைகளும் அதே மலைப்பருந்தும் இருக்கின்றன.
பாஸட் ஆற்றங்கரையில் எத்தனை தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றன! எத்தனை ஜனங்கள் கிழிந்து கந்தலான தங்கள் ரோமப் படுக்கைகளை இங்கே விரித்திருக்கிறார்கள்; தங்கள் கூரைகளை நாணற்புல்லினால் மூடியிருக்கிறார்கள்! வசந்த காலத்தில், காகவபெர்தாவின் சரிவுகளில் வயலட் மலர்கள் பூத்துக் குலுங்கும்போது, எத்தனை பேர் தங்கள் வெள்ளாடுகளையும் செம்மறிகளையும் மலைவெளிப் புல்நிலங்களுக்கு ஓட்டிப்போயிருக்கிறார்கள்; பின்னர், தங்கள் சேணப் பைகளில் பாலாடைக்கட்டிகளை நிரப்பியிருக்கிறார்கள்; பிறகு, மாரிக்காலத்தில் தினைமாவினால் செய்த ரொட்டியோடு சேர்த்து அதைத் தின்றிருக்கிறார்கள்!
✽✽✽
உஷ்ணம் மிகுந்த ஒரு மத்தியான நேரத்தில், மூன்று பேர் குதிரை மீதமர்ந்து காசுவபெர்தாவின் கரடுமுரடான சரிவுகள் மேலே போனார்கள், அவர்களுடைய உடைகள், மற்றும் அவர்களில் இருவர் சேணத்தில் அமர்ந்திருந்த விதம் இவற்றிலிருந்து அவர்கள் நகரவாசிகள் என்றும், கோட்டையையோ மலைப்