பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாஸ்கரத் தொண்டைமான்



இன்னும் எத்தனையோ திருவுருவங்கள் முருகனுக்கு. அழகனாக, இளைஞனாக, செல்வச் சீமானாக, ஆண்டியாக எல்லாம் உருவானவனே, வைத்தியநாதனாகவும் ஆம், பைத்தியம் தீர்க்கும் வைத்தியநாதனாகவே உருவாகிறான். அப்படி உருவானவன்தானே கொங்கு நாட்டில் உள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள முருகன். மக்களுக்கு எத்தனையோ பைத்தியம். பொன்மேல் ஆசை, பெண்மேல் ஆசை, மண்மேல் ஆசை. இந்த ஆசையெல்லாம் வளர்ந்து வளர்ந்து மனிதனைப் பைத்தியமே கொள்ளச் செய்கிறது. அப்போது மனிதனது பைத்தியம் தெளிவிக்க ஓர் அருளாளனின் தயவு வேண்டியிருக்கிறது. அந்த அருளாளனே குமரன், முருகன், கந்தன், கடம்பன். அவனைக் காண்பதற்கு பல தலங்களுக்குச் செல்லலாம். இல்லாவிட்டால் உள்ளக் குகையிலே இருக்கும் குஹனாகவே கண்டு மகிழலாம்.