பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

67


வானில் தோன்றும் செஞ்சுடர்த் தேவனாம் இளஞாயிறையே வேலேந்திய குமரனாகவும் கண்டிருக்கிறான். இப்படித்தான் முருகன், குமரன், வேலன், அழகன் தமிழ்க் கலைஞன் உள்ளத்தில் உருப்பெற்றிருக்கிறான். இன்னும் மேட்டு நிலங்களிலே திணைக்கதிர் விம்மி விளைந்து அங்கொரு காட்டுமயில் வந்து நின்றால், அங்கேயும் கலைஞன் உள்ளத்தில் காதலை விளைவித்திருக்கிறான் குகன். இப்படித்தான், நீண்ட காலத்திற்கு முன்னாலேயே, உலகம் தோன்றி, அதில் மனிதன் தோன்றி, அந்த மனிதன் தமிழ் பேசக்கற்றுக் கொண்ட அந்தக் காலத்திலேயே, அவன் கண்ட முதற் கடவுள், இப்படித்தான் முருகனாக, இளைஞனாக, அழகனாக இருக்கிறான். அருணகிரியார் வணங்கியிருக்கிறார். குமரகுருபரர் துதித்திருக்கிறார். எத்தனையோ கலைஞர்கள், கவிஞர்கள் இந்த அற்புத மோகன வடிவுடைய குமரனது அழகினைப் பாராட்டிப் பாடி இருந்தாலும், அந்த அழகிலே மயங்கித் தன்வயமிழந்து நின்றவர் அருணகிரியார் தான். அழகுணர்ச்சி அவருக்கு கருவிலே வாய்த்த திருவாக அமைந்திருக்கிறது. இல்லாவிட்டால் அந்த இளவயதிலேயே வாதினை அடர்ந்த வேல் விழியார் தங்கள் காதலுக்கு ஏங்கி நின்றிருப்பாரா அந்தக் காதல் கடலிலே முங்கி முழுகி அமிழ்ந்தே போயிருப்பாரா? அன்று பெண்ணிடத்தே கண்ட அழகையே பின்னர் இறைவனிடத்துக் கண்டிருக்கிறார். ஆதலால் அவனை அழகான மேனி தாங்கிய வேளாக அயிலும் மயிலும், அறமும் நிறமும், அழகும் உடைய பெருமாளாக, புதுமயில் மீது யாவரும் தொழவரும் அழகனாகப் பார்த்திருக்கிறார். கனகமயிலினில் அழகு பொழிய கருணை மருவி வர வேணும் என்று வேண்டியிருக்கிறார். நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் என்று நம்பி இருக்கிறார். 'மயிலையும், அவன் திருக்கை அயிலையும், அவன் கடைக்கன் இயலையும் நினைந்திருக்க வாருங்கள்’ என்று உலகோரையெல்லாம் கூவி அழைத்திருக்கிறார். இப்படி அழகு துண்டிய ஆர்வந்தான். அவர் கவிதை எழுதுவதற்கு அவற்றைப் பாடிப் பரவி இறைவனை வழுத்துவதற்கு துணை நின்றிருக்கிறது.

இப்படி முருகனது அழகிலே உள்ளம் பறிகொடுத்தவர், அந்த அழகனை அலங்காரம் செய்து பார்க்கவும் முனைந்திருக்கிறார். அழகெல்லாம் ஒருங்கே கண்டால் யாவர்தான் ஆற்றவல்லார்? யாரே