கங்கைத்துறை - 252
“ கார்குலாம் நிறத்தான் கூறக்
காதலன் உணர்த்து வான்.இப்
பார்குலாம் செல்வ நின்னை
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான்
இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய
செய்குவன் அடிமை என்றான்.”
‘உலகெலாம் ஆளப் பிறந்த உத்தமனே கள்ளமுடைய என் உள்ளத்தை நீ கண்டு கொண்டாய் ! என் போலித் தன்மையை அறிந்துதான் இன்று போ’ என்று பணித்தாய். உண்மையில் நான் அன்புடையவனாயின் இந்தக் கோலத்தில் உன்னைப் பார்த்த கண்களைப் பறித்து எறிந்திருக்க மாட்டேனா? ஆயினும், என் அப்பனே ! உன்னை விட்டு எங்கே போவேன்? இன்ப நிலையத்தை விட்டு இன்னலின் உள்ளே போவேனா? நிரம்பிய அன்பு என்னிடம் இல்லை என்றாலும் இயன்ற சேவை செய்து கொண்டு இங்கேதான் இருப்பேன் என்றான் குகன்.
அவன் சொல்லிய சொற்களைக் காதாரக் கேட்டான் இராமன். கருமையான உருவத்தில் அமைந்த அருமையான அன்பின் சுவையை நுகர்ந்தான். அவன் உள்ளத்தின் செம்மையைச் சீதையும் தம்பியும் கண்டு கொண்டார்களா என்று அறிய விரும்பி இருவர் முகத்தையும் நோக்கினான். தம்பியின் முகத்தில் ஒர் இன்ப ஒளி படர்ந்திருந்தது. மாசற்ற மனமுடையான் ஒருவன் கங்கைக் கரையில் வேடர் குலத்தில் உள்ளான் என்று எண்ணிக் களிப்புற்ற தம்பியின் முகம் திருமுக மாய் இலங்கிற்று.
“கோதைவிற் குரிசில் அன்னான்
கூறிய கொள்கை கேட்டான் சீதையை நோக்கித் தம்பி
திருமுகம் நோக்கித் தீராக்