13. திருவரங்கம்
பூநீரங்கம் என்னும் திருவரங்கம் நாடறிந்த நன்னகரம்; சங்கத் தமிழ் மாலையும், சான்றோர் புகழ் மாலையும் பெற்ற திருநகரம். வான் அளாவிய சோலை சூழ்ந்த அவ் வளநகரில் திருமால் கோயில் கொண்டருளினார். அப் பெருமானை மனமாரத் தொழுது வாயார வாழ்த்தும் பேறு பெற்ற அடியார் ஒருவர்,
“ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “ என்று ஒர் அழகிய தமிழ்ப் பாட்டு இசைத்தார். நல் நெஞ்சமே 1 தேனார் பூஞ்சோலைத் தென் அரங்க மாநகரில் கண்ணுறங்கும் பெருமான் ஒருவன் உளன்; அவனை நினைக்க நீ உண்டு வாழ்த்த வாயுண்டு; பாடப் பாட்டுண்டு; இனி உனக்குப் பயமும் உண்டோ ? என்று கூறினார் அக் கவிஞர்.
இவ்வாறு காவிரித் திருநதியிலே பள்ளிகொண்ட திருமாலின் கோலம் இளங்கோவடிகளின் உள்ளத்தையும் அள்ளுவதாயிற்று. பொன்மலையின்மீது நீலமேகம் நிரந்து படிந்தாற் போன்று அரவணையின்மேல் திருமால் பள்ளி கொண்டுள்ளார் என்று அவர் அழகாகப் பாடினார்.
“ விளிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும்"