$ ஆற்றங்கரையினிலே
இருவரும். சிற்றம்பலத்தைத் தொழுது ஏத்தும் செல்வமே செல்வம் எனக் கொண்டார் சேரமான் பெருமாள். திருவரங்கத்தைச் சேவித்துப் பெறும் செல்வமே சிறந்த பெருஞ் செல்வம் என்று கருதினார் குலசேகரப் பெருமாள்.
நிலையற்ற வாழ்க்கையை நிலையாகக் கருதுகின்றதே இம் மாநிலம் பொன்னும் பொருளும் தேடி அல்லும் பகலும் அலைகின்றதே இன்றுளார் நாளை மாள்வார் என்பதை உணராது இறுமாந்திருக்கின்றதே பொருளல்ல வற்றைப் பொருளாகக் கருதும் மருள் நிறைந்த இம் மாந்தருடன் சேர்ந்து நான் வாழ மாட்டேன். அவர் போகும் நெறியிலே நான் போக மாட்டேன். முத்தி நெறியறியாத முழு மூடமக்களுடன் நான் சேர மாட்டேன். அரந்தை கெடுத்து வரந்தரும் பெருமான் திருவரங்கத்திலே உள்ளான். ஐயனே அரங்கனே ! என்று அவனை அயராது அழைப்பேன். அப் பெருமானையே காதலித்துக் கண்ணிர் வடிப்பேன்’ என்று ஆசையுற்றுப் பேசுகின்றார் குலசேகரப் பெருமாள்’
கருணை வடிவாய திருமால் அரங்க மாநகரில் பள்ளி கொண்ட கோலத்தில் அமைந்த குறிப்பையும் ஆன்றோர் உணர்ந்து மகிழ்ந்தனர். அரங்கநாதன் திருமுடியை மேற்கே வைத்தார்; திருவடியைக் கிழக்கே நீட்டினார். தென் திசைக்குத் திருமுகம் காட்டினார்.
“குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கிக் கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலு மாகண்டு உடல்எனக்கு உருகு மாலோ
என்செய்கேன் உலகத் தீரே”