திருவரங்கம் 96
விண்ணிலே தவழ்ந்த கருமேகத்தில் தன் காதலனாகிய கண்ணன் நிறங்கண்டு களிப்புற்றாள். சோலையிலே இசை பாடும் குயிலை நோக்கி, ‘கருங் குயிலே ! என் கண்ணன் வரக் கூவாய்’ என்று வேண்டினாள் காதல் புரியும் இளங் கன்னியர் வழிபடும் காம தேவனைக் கை தொழுதாள். கரும்பு வில் ஏந்திய காம தேவா ! என் கருத்தில் உறையும் காதலன் நீல மேனியன், கமலக் கண்ணன், பவளவாயன். அவன் திருமேனியை நான் காணக் கருணை புரியாயோ ! அவனே என் கண் நிறைந்த காதலன் கருத்திற்கு உகந்த கணவன். மானிடன் எவனையும் நான் மணப்பதில்லை. எவர்க்கேனும் என்னை மனம் பேசினால் மாண்டு தீர்வேன்:
“ மானிட வர்க்கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாப் மன்மதனே”
என்று வாய்விட்டு உரைத்தாள்.
இங்ஙனம் மையல் நோயால் நையலுற்ற மங்கைக்கு மணிவண்ணன் கனவிலே காட்சியளித்தான். இந்திரன் முதலிய வானவர் எல்லாம் நிறைந்திருக்க, மேள தாளங்கள் முழங்க, மனக்கோலத்தில் மணிவண்ணன் எழுந்தருளி, நித்திலப் பந்தலில் தன் கைத்தலம் பற்றிக் கடிமணம் செய்யக் கனாக் கண்டாள் கோதை, 8
கண்ணன் மணக் கோலங் கொண்டு வரும் காட்சியையே கனவிலும் நனவிலும் கண்ட கோதை தன்னை ஆடையணிகளால் ஒப்பனை செய்வாளாயினாள். கழுத்திலே காறை அணிவாள், கண்ணாடி பார்ப்பாள்; கைவளை திருத்துவாள் கூறை உடுத்துவாள்; வழி மேல் விழி வைத்து நிற்பாள். தன்னந் தனியளாய் இருந்து கன்னங்கரிய திருமாலை நினைந்து கண்ணிர் வடிப்பாள். பரந்தாமா என்று பரிந்து அழைப்பாள். திருவரங்க நாதனது எழுதரிய அழகினை எண்ணி எண்ணி ஏங்குவாள்.