பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காவற்காரன் வந்தான்; பவ்யமாகக் கைகட்டி: நின்றான்.

"எங்கேடா நம்ப பயல்...?"

"யாரைச் சொல்றீங்க?"

"அதாண்டா சங்கிலி!"

சங்கிலி ஓட்டமாக ஓடி வந்தான். பத்து வயதுதான். வறுமைக் காலத்தையொரு பொருட்டாகக் கருதியிருக்கவில்லை அவன் என்பதை, அவனது முகத் தெளிவு சுட்டியது. அழுக்கு நிஜார்; புதுச் சொக்காய். பறட்டைத் தலையை எண்ணெய் எழிலுறக் காட்டிற்று.

பத்து மணிச் சங்கு ஊதியது.

வெய்யில் சுள்ளாப்புப் பெற்றது.

பனி வாடை கலைந்தது.

வாசற்புறத்தே சீன எதிர்ப்புக் கண்டனத் தொனி விண்ணைச் சாடியது.

சங்கிலி கை கட்டி நின்றவன், கோஷங்களைக் கேட்டு வாசலுக்கு விரைந்து வந்து, "சீனாக்காரன் ஒழிக!" என்று கூவிவிட்டு, அதன் உணர்வில் தன் கடமையை ஓரளவேனும் நிறைவேற்றிக் கொண்டவன் மாதிரி திருப்தி அடைந்தவனாக, மறுபடியும் உள்ளே சென்று, பழைய இடத்தில் நின்ற போது, அவன் பார்வையில் அருவருக்கும் கொடூரமான பார்வையுடன் சுவரில் காட்சி தந்த வில்லன் ஒருவனின் படம்தான் தென்பட்டது. பையனுக்குச் சிரிப்பு புறப்பட்டது, அடக்கிக் கொண்டான். முதலாளியின் கோபம் தேங்கிய முகத்தை இந்த ஒரு மாதத்தில் அவன் ஒருவாரம் கூட கண்டதில்லையே?...

"என்னா சமாச்சாரம் .. ஐயா கோபாமாயிருக்காங்களே?'