பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

“ஐயாவுக்குக் காப்பி வாங்கியாரட்டுமுங்களா?” என்று மானேஜரின் காதைக் கடித்தான் சங்கிலி.

சகடயோகம் மூச்சுக்காட்டினால்தானே?

“ஏம்பா, இப்ப நீ என்னா சொல்றே?”

“சத்தியமான பேச்சுங்க. நான் தப்புதண்டா ஏதும் செஞ்சதில்லிங்க! யாரோ வேண்டாதவங்க உங்ககிட்டே கோள் மூட்டியிருக்கிறானுக...!”

எட்டு முழச் சுவரைத் தாண்டியிருந்த வெளியில் ஒரு பரிவாரம் நின்றது.

பிள்ளை, நீறு பூசிய நெற்றியைப் பிடித்துக் கொண்டே ஒரு சில கணங்கள் வீற்றிருந்தார். ஆசனம் சுட்டது. நெஞ்சுச் சூடு சும்மா விடுமா? மறுபடியும் மறுபடியும் சகடயோகத்தை ஓரக் கண்கொண்டு பார்த்தார். ‘ஆளு நடிக்கறாரன்!...ம்...நடிக்கட்டும், நடிக்கட்டும்...!’

“ஒய்!......உள்ளே வாரும் ஒய்!” என்று சகடயோகத்தை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தார் மெய்கண்ட பிள்ளை. பட்டுச் சட்டை, அந்தக் கறுப்பு மேனிக்குக் கன பொருத்தம். அதாவது, கன சரீரத்துக்குக் கன பொருத்தம்!...

இருட்டறைகள் சிலவற்றை வெளிச்சத்தைப்போட்டு தேடினார் அவர். ஒரு தடயமும் கிட்டவில்லை!

மானேஜரின் முகத்தில் அப்பொழுதுதான் புதுக்களை வந்தது.

“ஐயாவுக்கு ஓவல்...”

ஓடி வந்த குரலுக்கு முன்னே ஓடி வந்தான் சங்கிலி.

“டேய்!”

“ஏங்க...!”

“நீ எத்தினி நாளா இங்கே இருக்கிறே?”