பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

புது மானேஜர்: தியேட்டரின் முகப்பில் வாழைக் குருத்துகள் கட்டப்பட்டப் பணியை மேற்பார்வையிட்டார். பிறகு, "சங்கிலி," என்று அழைத்தார்.

நாகரிகமாக வந்து நின்றான் சிறுவன்.

"ஸார்...!"

"டேய் ஒரு கால் பிளேட் பிரியாணியும், ஒரு ஆம்லெட்டும் வாங்கியாடா... பசி தாங்கலே... டிக்கட் புக்கிங் முடிஞ்சுதான் வீட்டுக்குப் போக முடியும் போல!..." என்று காரணம் சொல்லி, பத்து ரூபாய்த்தாள் ஒன்றினைச் சுண்டி எடுத்து அவனிடம் நீட்டினார்.

சங்கிலி வெளியேறி, அந்தக் கிளப்பினுள் நுழைந்து, 'ஆர்டர்' கொடுத்தான். தூங்கும் கூட்டம் நிரம்பிவழிந்தது. சாப்பிட்டவர்களும் சாப்பிடப் போனவர்களும், அடங்கிய பசியையும் அடங்காப் பசியையும் மோதவிட்டார்கள். சங்கிலி, அந்தக் கல்லாவை - மேஜையை நெருங்கினான். பிறகு, "எனக்கு கால் பிளேட் பிரியாணி... ஒரு ஆம் லெட்...!" என்று சொல்லிக் கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். நோட்டு மேஜை இழுப்பினுள் நுழையவே, "பாக்கிச் சில்லறை குடுங்க...!" என்று கேட்டான் அவன்.

"இருப்பா...!" என்ற பதில் 'கல்லாக்கார'ரிடமிருந்து வந்தது.

"பிரியாணி கால் ..ஆம்லெட் ஒண்ணு ... எம்பத் தைஞ்சு காசு பில்!" என்று 'குரல்' கன கச்சிதமாக வந்தது.

பையன் பிரியாணி ஆம்லெட் பொட்டலங்களைக் கையில் வாங்கிக்கொண்டு, "ஐயா! பத்து ரூவா குடுத்தேன் ..எண்பத்தஞ்சு காசு போக மிச்சம் தாங்க சார்!"