பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


அய்யருசாமி தெவசம் சொல்லப் பறிஞ்சு வந்தாக்க, நெனப்பூட்டி குறிச்சுக்கிடுங்க!”

“ஆகட்டும்!”

வள்ளியம்மை தேங்காயும் கையுமாகக் கோயிலுக்குப் புறப்பட்டாள்.

தெய்வத்தின் அறக்கருணையே குழந்தை உருக் கொண்ட பாவனை துலங்குகிற குழந்தை அவன். ஆழி மழைக் கண்ணனா? இல்லை, அருள்மிகு கார்த்திகை மைந்தனா உதட்டுக் கரைதனில் மெல்லிளம் புன்னகை;இமைக் கரைதனில் ஆர்வத்துடிப்புக் காட்டும் துள்ளல். மெட்டு ஒலிக்க, கைக்கொலுசுகள் குலுங்க, கழுத்துச் சங்கிலி குலுங்கத் திகழ்ந்த அவன் இன்று எப்படி உருமாறிவிட்டான் அரைக் கைச்சட்டை என்ன, அரைக்கால் சட்டை என்ன, கோணல்வகிடுக் கிராப்பு என்ன, அரிச்சுவடி படிக்கப் பள்ளிக்கூடம் செல்லப் போகிறானாம்! கேட்டீர்களா?

அண்ணமலை நயன்ச் சிமிழ்களை மூடித் திறந்து அழகு பார்த்த வேளையில்தான், அழகு காட்டி ஓடின, மேற்படி சிந்தனை நயங்கள். தானும் பிறருமாக, தானும் தன் இல்லக் கிழத்தியுமாக ரசித்த சிறுவனைப் பற்றிய சிந்தனை இதழ்களின் நெடி அவரைக் கிறங்கச் செய்திருக்க வேண்டும்.

ஆலய மணி ஒலித்தது. கன்னத்தில் போட்டுக் கொண்டார்; ‘சிவ சிவ’ என்று முனகினார். அவர் எழுந்து குந்தினார்.

ஏர்மாட்டை அடித்து நொறுக்கினான் பண்ணைக்காரன். ‘பாவிப் பயமவன்!’ உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆணயை ஏவினார். ஏலே, அடிக்காதேடா! வாயத்த செம்மமுடாலே போன சென்மத்லே செஞ்ச