பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


வண்ணக் களஞ்சியத்தை வாரியணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தவாறு வாசலில் அமர்ந்திருந்தான் அந்தச் செம்படவன். மெய்ம்மறந்திருந்தாள் அவனுடைய மனையாட்டி.

"அண்ணே , அண்ணே ! ஓடியா, ஓடியா! பாவம், யாரோ ஒரு பொம்பளை காட்டாத்திலே விழுந்திட்டா . நாங்க படகிலே காப்பாத்தினோம். பொனைக்கிறாளோ, என்னமோ, சங்கிலிக் கருப்பனுக்குத்தான் தெரியும்!"

அந்தப் பெண் மெல்ல மெல்லக் கண் திறந்தாள். கண்ணிர் வெள்ளம் புரண்டோடியது. அவள் கதறினாள் : "கடவுளே! நான் செஞ்ச குற்றத்துக்கா என் குழந்தையை என் கிட்டேயிருந்து பிரிச்சே? என்னை ஆசை காட்டிமோசஞ் செஞ்சவனைக் கொன்னுப்பிட்டு, என் குழந்தைக்காக ஓடோடி வந்தேனே....! பெற்ற வயிறு துடிச்சுச் சாகுதே? ஐயோ, என் ஆருயிர்ச் செல்வமே, இனி உன்னை எப்பிறப்பிலே கண்ணாலே காணப் போறேனோ?...என்னை மன்னிச்சிட மாட்டியா, தாயே? உனக்குத் தாயாகக் கொடுத்து வைக்காத பாவியாகிப்பிட்டேனே?- கொலைகாரி யாகிப்பிட்டேனே? ஐயோ....!"

அவளது விம்மிய மார்பகத்திலிருந்து பால் வெள்ளம் சுரந்தோடியது.

அவள் கண்கள் மூடிக் கொண்டன.

குழந்தை வீரிட்டு அழுதது!