பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 61


‘போடான்’ Photon என்று கூறப்படும் சக்தி வாய்ந்த ஒளித்துகள்களின் கற்றையே ஒளி என்று ஐன்ஸ்டைன் விளக்கம் தந்துள்ளார்.

எனவே, சக்தி வாய்ந்த துகள்கள், உலோகத் தகடுகளின் மேல் மோதுவதால், மின்னணுக்கள் தோற்றுவிக்கப் படுகின்றன. இந்த செயல், பில்லியர்டு பந்துகளின் மோதலைப் போன்றது.

இத்தகைய அறிவியல் விதிகளின் விளக்கங்களால், ஐன்ஸ்டைன் ஒளி மின் விளைவுகளைக் கண்டுபிடித்தார். இந்த புதுமையான ஆராய்ச்சியை, விஞ்ஞானிகள் வரவேற்றார்கள். பாராட்டினார்கள். இந்த கண்டுபிடிப்புக்குத் தான் நோபல் பரிசும் ஐன்ஸ்டைனுக்குக் கிடைத்தது.

இந்த ‘ஒளிமின் விளைவு’ என்ற கண்டுபிடிப்பினால், உலகம் பெற்ற உயர்வு என்ன? இந்த ஆராய்ச்சியின் பலனால்தான், பேசும் படம் என்ற சினிமா இன்று உலகம் எல்லாம் சினிமா படங்களாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அது சரி, இந்த விளைவால் சினிமா பெற்ற புதுமை என்ன? பலன் என்ன?

ஒளி மின் விளைவு என்றால் என்ன என்பதை இதற்கு முன்பு இதே பகுதியில் விளக்கியுள்ளோம். அந்த ஒளிமின் விளைவை அடிப்படையாகக் கொண்டு ஒளி மின்கலம் என்ற Photo electric cell ஒன்றை உருவாக்கினார்கள். இந்த மின்கலத்தால்தான், நாம் திரையரங்குகளிலே படம் பார்க்க உட்கார்ந்த உடனே, பாட்டுக்களையும் பேச்சுக்களையும் கேட்டு மகிழ்கின்றோம்.

இந்த ஒளிமின்கலம், ஒளிச் சக்தியை மின் சக்தியாக மாற்றுகின்றது. ஒளி மின்கலம், ஃபிலிமில் பதிவான ஒளியை, ஃபிலிமில் ஒளிந்திருக்கும் சுவையான பாடல்களையும், இசைகளையும், வசனங்களையும் வெளிக் கொண்டு வந்து நம்மை ரசிக்க வைக்கின்றது.