பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஆழ்கடலில்


பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந்திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு - வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனித வாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே - அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல் வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்குகிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை!.

நோற்பாரின் நோன்மை உடைத்து
"ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து"

(பதவுரை) ஆற்றின் ஒழுக்கி = (ஓர் இல்லறத்தான் தன் - மனைவி மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அதன் இழுக்கா இல்வாழ்க்கை - (தானும்) நல்லறத்திலிருந்து தவறாது நடத்துகின்ற இல்வாழ்க்கையானது, நோற்பாரின் - தவஞ்செய்வாரைக் காட்டிலும், நோன்மை உடைத்து = தவவலிமை உடையதாகும், (ஆற்றின் - ஆறு = நல்ல நெறி; இழுக்குதல் = தவறுதல் - இழுக்கா(த) = தவறாத.)

(மணக்குடவர் உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப் பண்ணித் தானும் அறத்தின்பா லொழுகும் இல் வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து.

(பரிமேலழகர் உரை) தவஞ்செய்வாரையுந் தத்தம் நெறியின்க ணொழுகப் பண்ணித் தானுந் தன்னறத்திற் றவறாத இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிலையினும் பொறையுடைத்து.