பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

ஆழ்கடலில்


நடத்துகின்ற இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்ல வழியில் நடத்துதல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக.

இதைத்தானே பிசிராந்தையார் என்னும் சங்கப் புலவர் செய்தார்! அவர் தமது பண்பாட்டால் மனைவி. மக்கள், தொழிலாளர் முதலிய எல்லோரையும் திருத்தினார்; அரசனும் நல்லவன்; ஊராரும் சான்றோர்கள்; அதனால் அமைதியான நல்ல சூழ்நிலையில் நல்வாழ்வு வாழ்ந்தார் புலவர். இந்த இனிய இல்லறவாழ்வால், வயது மிக நிரம்பியும், என்றும் நரை திரையில்லாத இளைஞராகவே அவர் காணப்பட்டார். என்றும் இளமை பெற்ற இதனினும் பெரிய தவம்-பெரிய யோகம் வேறு என்ன? இதனை, தம் என்றுங் குன்றா இளமை பற்றி அவரே பாடிய.

"யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதி ராயின்,
மாண்டஎன் மக்களொடு மனைவியும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்...
சான்றோர் பலர் யான் வாழு மூரே"

என்னும் புறநானூற்றுப் (191) பாட்டாலறியலாம்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

(தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும், உண்மையில் அறம் என்று சொல்லப்படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான்! அந்த இல்வாழ்க்கையும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம்.