பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

111


(பதவுரை) செவி கைப்ப = கேட்கும் காது கசக்கும்படி, சொல் பொறுக்கும் = மக்கள் சொல்லும் குறைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய, பண்புடை வேந்தன் = உயர்ந்த பண்பாட்டினையுடைய மன்னனது, கவிகைக்கீழ் = குடை நிழலின் கீழே, உலகு தங்கும்=உலகம் தங்கி வாழும். (கைத்தல்=கசத்தல்; சொல் =சொல்லுங்குறை; கவிகை -குடை; உலகு -- உலக மக்கள்).

(மணக்குடவர் உரை) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டுவைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக்கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் 'புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல' என்பாரு முளர். (இந்த உரை பொருந்தாது )

(பரிமேலழகர் உரை) இடிக்குத் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும் விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை நிழற்கண்ணே தங்கும் உலகம்.

(விரிவுரை) இந்தக் குறளை இருபதாம் நூற்றாண்டினர் துருவித்துருவி ஆராய வேண்டும். இந்தக் காலமோ குடியரசுக் காலம்; வள்ளுவர் காலமோ முடியரசுக் காலம்; ஆனால் உண்மையில் எது முடியரசு? எது குடியரசு? என்று பார்ப்போம்.

'செவி கைப்புச் சொல் பொறுத்தல்' என்றார். சில உணவுப் பொருள்கள் நாக்குக்குக் கசப்பது போன்றே, சில சொற்கள் காதுக்குக் கசக்கும். நம்மைப் பாராட்டிப் புகழுஞ் சொற்கள் காதுக்கு இனிக்கும்; குறைகூறி யிகழுஞ் சொற்கள் காதுக்குக் கசக்கும். இதைத்தான் 'செவி கைப்பச் சொல் என்றார். வாய்ச் சுவை போலவே செவிச்சுவையும் உண்டன்றோ ? 'செவியிற் சுவையுணரா' என்னும் குறளை நோக்குக.