பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

113


 நாடே உண்மையான குடியரசு நாடு. மொடுக்கென்று வாயைத் திறந்ததுமே தலையைச் சீவுகின்ற நாட்டில் சோற்றுமழை பெய்தாலும் நான் அங்கு வாழ விரும்பேன் , பட்டினி கிடந்தாலும் பேச்சுரிமை - எழுத்துரிமை உள்ள நாடே எனது இன்பபுரி. இதைத்தான் சொற்பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும் என்றார்.

மேலும், தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துச் சொல்லத்தான் மக்கள் விரும்புவர். தமது துன்பத்தைப் பிறர் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும், வெளியில் எடுத்துச் சொல்வதே ஒரு பெரிய ஆறுதல் - ஒரு பெரிய மருந்து. இதற்குத்தான் "வெளிப்பாட்டு மருத்துவம்" (Expressive Theory) என்று பெயராம். "ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்" என இறைவனை நோக்கி மணிவாசகர் முறையிட்டுள்ள திருவாசகப் பகுதியினை ஈண்டு ஒத்திட்டு நோக்குக. மணிவாசகர் கண்காணா இறைவனை (கடவுளை) நோக்கி நீ அருள் புரியவில்லை எனக் குறை சொன்னார். மக்களோ கண்கண்ட இறைவனை (முன்னனை) நோக்கிக் குறை சொல்வர். இதற்கு மன்னன் இடங்கொடுக்க வேண்டும். அன்னவன் கவிகையின் கீழேதான் உலகு தங்கும்.

பிறர் சொல்வதையெல்லாம் பொறுத்துக்கொள்வது அரசனுக்குக் கோழைமையல்லவா என்று சிலர் கருதலாம். இல்லை, பொறையுடைமை ஒரு பெரிய வலிமையாகும். 'வன்மையுள் வன்மை பொறை' என்று வள்ளுவர் மற்றோரிடத்தும் கூறியுள்ளார். மேலும் இஃது ஓர் அரசியல் திறமையும் (இராச தந்திரமும்) ஆகும்.

இந்தக் காலத்து அரசுகள் சில, ஒறுக்கும் நோக்குடன் - கொல்லும் குறிக்கோளுடன், அரசாங்கத்தைத் தாக்கிப் பேசுபவர் யார்-தாக்கி எழுதுபவர் யார் என ஒற்றர்கள்