பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஆழ்கடலில்


ஒரு கடவுள் (திருமால்) காவிரி நடுவே இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் என்ன? உயிர்களைக் காப்பாற்றும் வேலையை நம் சடையப்பன் பார்த்துக் கொள்வான் என்ற துணிவே" என்று எழுதியனுப்பினான்.

"கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் நின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலே யொரு
கருணை மாமுகில் துயிலுமே
தருவுயர்ந்திடு புதுவை யம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழவே"

என்பது கண்டி. மன்னன் பரராச சேகரனது பாடற்பகுதியாம். எனவே, மக்களுக்குக் கண்கண்ட இறைவன் மன்னனே என்பது புலப்படும். ஆசிரியர் கூட, அரசனது மாட்சிமையைப் பற்றிச் சொல்லும் இந்தப் பகுதிக்கு இறை மாட்சி என்று பெயர் வைத்திருக்கும் நுணுக்கத்தில் மிளிரும் நயத்தினைக் காண்க. இறைமாட்சி என்னும் இந்தப் பகுதிக்கு. இறையைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள், முடிந்த முடிபாக - உயர்ந்த உச்சி மணி விளக்காக மிளிர்வதைக் கண்டுபிடித்தே. நான் இந்தக் குறளை இறுதிக் குறளாக - அதாவது பத்தாவது குறளாக அமைத்திருக்கிறேன். ஆனால், பழைய உரையாசிரியர்களுள், காலிங்கர் என்பவர் இதனை ஏழாவது குறளாகவும், பரிமேலழகர் எட்டாவதாகவும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் ஒன்பதாவதாகவும், பரிதியார் பத்தாவதாகவும் தத்தம் உரைகளில் அமைத்துள்ளனர். இம்மட்டில் நான் பரிதியார் பக்கத்தைச் சேர்ந்தவனே. நீங்கள் எப்படியோ? ஆராய்க!

இனி, இந்தக் குறளிலுள்ள சொல் நயங்களில் சிறிது திளைப்பாம்: காப்பாற்றுபவன் எவனோ அவனே இறைவன்