பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

135


வும், ஒரு கண் பொட்டையராகவும், அல்லது, 'ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூருடைய கோவே' என்று ஆண்டவனை அப்பரடிகள் அன்புக்கிண்டல் செய்திருப்பது போல ஒன்றரைக் கண்ணராகவும் காணப்படுகின்றோம். அதாவது பலருக்கு எண் எழுத்து இரண்டுமே தெரியா; எண் தெரிந்த சிலருக்கு எழுத்துத் தெரியாது: எழுத்துத் தெரிந்த சிலருக்கு எண் தெரியாது. சிலர் அது அதிலும் அரை - முக்கால் தெரிந்தவராயிருப்பர். இது இக்கால நிலைமை -- உண்மைதானே! ஆனால் வள்ளுவர் சொல்லியிருப்பதைப்பார்த்தால், மக்களுள் மிகவும் பெரும்பாலோர் இரண்டு கண்களும் பெற்றிருப்பது போல, எண் எழுத்து இரண்டும் அக்காலத்தவர் கற்றிருந்தனர் என்று கருதலாம்.

ஆசிரியர் கல்வியைக் கண் என்று சொல்லியுள்ளார். உறுப்புகளுள் கண்ணுக்கு எந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடம் (முதலிடம்) இங்கே கல்விக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கூட, கல்வி வேறு - கண் வேறு என்பதை மறந்து, இரண்டையும் ஒன்றாகவே வழங்குகின்றனர். "நீங்கள் தாம் என் பிள்ளைக்குக் கண் திறந்துவிடவேண்டும்," "ஐயாதான் என் பிள்ளைக்குக் கண் திறந்து வைத்தார்" என்னும் வழக்குத்தொடர்களில் காணப்படும் 'கண்' என்பது கல்விதானே? மேலும், கண் என்னும் சொல்லுக்கும் கணக்கு என்னும் சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஓர்க. கண் என்ற அடிப்படையின் மேல் உருவானது தான் கணக்கு என்னுஞ் சொல்லோ? கண்ணுவது கண் - கணக்கு. உருவத்தைக் காண உதவுவது கண் - உண்மையை உணர உதவுவது கணக்கு. கணக்கு என்றால் கணிதம் மட்டுமன்று; கணக்கு என்றாலே பொதுவில் நூல் என்று பொருள். புறநானூறு முதலிய பதினெட்டு நூல்களுக்குப் 'பதினெண் மேற்கணக்கு' என்றும், நாலடியார் முதலிய பதினெட்டு நூல்