பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

163


னவே பெற்றிருக்கின்ற ஓர் உயர்ந்த உயிர்ப்பொருளாக அவனை மதித்து, கெட்டிக்காரன் என்று தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி, அவனுடைய அறிவாற்றலை வளர்த்து விட வேண்டும். இப்பணியில் ஆசிரியருடன் பெற்றோர்க்கும் போதிய பங்கு இருக்கவேண்டும். மாணாக்கர்களும் அகல ஆழப்படித்து அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும், இது தானே, ' கற்றனைத் தூறும் அறிவு' என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளுவனாரின் நோக்கமாக இருக்க முடியும்?

தோண்டிய அளவிற்கேற்ப நீரூறும் என்பதில், தோண்டிய அளவு என்பது என்ன? கேணியை அகலமாய்த் தோண்டுதல் - ஆழமாய்த் தோண்டுதல் என்பது தானே! அதுபோலவே கல்வியையும் அகலமாய்க் கற்க வேண்டும் - ஆழமாய்க் கற்கவேண்டுமல்லவா? அப்படியென்றால் என்ன? பலகாலம் கற்றல் - பல நூல்களைக் கற்றல் - பல கலைகளையுங் கற்றல்தான் அகலமாய்க் கற்றல் என்பது. ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஐயந்திரிபற முற்ற முடிய நுண்ணிதின் கற்றுத் துறைபோதல் தான் ஆழமாய்க் கற்றல் என்பது. இவ்வளவு விரிந்த கருத்துகளைக் 'கற்றனைத் தூறு மறிவு' என்னும் தொடருக்குக் கொள்ள வேண்டும் என்பதை, தொட்டனைத் தூறும் மணற்கேணி என்னும் எடுத்துக்காட்டால் பெற வைத்தார் ஆசிரியர், இதற்கு 'எடுத்துக்காட்டு உவமையணி' எனப் பெயர் கொடுத்துள்ளனர் அணியிலக்கண நூலார்.

தொடுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள் கண்டோம். அது எப்படி? அது மிகவும் என் உள்ளத்தைத் தொட்டது என்று உலக வழக்கில் பேசுகிறோம். உள்ளேயிருக்கும் உள்ளத்தைத் தொடுவதென்றால் எவ்வளவு ஊடுருவிச் சென்றிருக்க வேண்டும்! அதுபோலவே, கேணி