பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கடவுள் வாழ்த்து


எண்குணத்தான்


கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

(ப-ரை) எண்-மதிக்கத்தக்க, குணத்தான் - குணத்தை உடைய கடவுளுடைய, தாளை - திருவடியை, வணங்கா - வணங்காத, தலை - தலைகள், கோள் இல் - (காணுதல், கேட்டல் முதலிய உணர்வுகளைக்) கொள்ளுதல் இல்லாத, பொறியின் - (குருட்டுக்கண், செவிட்டுக்காது முதலிய) உறுப்புகளைப் போல, குணம் இல - பயன் உடையன அல்ல. ஏ - தேற்றம்.

(தெ-ரை) காணும் வன்மை இல்லாவிட்டால் கண்ணுக்கு இழிவு; கேட்கும் வன்மை இல்லாவிட்டால் காதுக்கு இழிவு; நடக்கும் வன்மை இல்லாவிட்டால் காலுக்கு இழிவு; இவற்றைப் போலவே, கடவுளை வணங்குந் தன்மை இல்லாவிட்டால் தலைக்கு இழிவு என்று திருவள்ளுவர் கூறியிருக்கும் உவமை நயம் நுணுகியுணர்ந்து மகிழ்தற் குரியதாகும். .

எண்ணுதல் என்னும் சொல்லுக்கு மதித்தல் என ஒரு பொருள் உண்டு. எனவே, எண்குணத்தான் என்பதற்கு மதிக்கத்தக்க குணத்தை உடையவன் என்று பொருள் கூறப்பட்டது. குமரகுருபர அடிகளாரும், மதுரைக் கலம்பகம் என்னும் நூலில், மதிக்கத்தக்க மதுரை என்னும் பொருளில் 'எண்தரு மதுரை' எனக் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியதாகும். எண் குணத்தான் என்பதற்கு எட்டு வகையான குணங்களை உடையவன் என்றும் பொருள்

கூறலாம்.