பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

21


அழகு-பேரழகு அவனை வருத்திற்றாம். அதைச் சொல்கிறான். அதுதான் தகையணங்குறுத்தல், தகை= அழகு; அணங்கு = வருத்தம்; உறுத்தம் = மிக உண்டாக்குதல். அஃதாவது, அழகு மிகவும் வருத்துதல் - அழகு மயக்குதல் என்பது பொருள். இக்கருத்துத்தான், தகையணங்குறுத்தல் என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை வருமாறு.

மாலும் நெஞ்சு

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு”

(தெளிவுரை) இதோ ஓர் உருவம்! என்ன! ஒரு தெய்வப் பெண்ணோ? அன்று. ஒருவேளை உயர்ந்தவகை மயில் தானோ? அன்று அன்று ஆயின், கனத்த தோடு அணிந்த காரிகை தானோ? என்ன வியப்பு! எதையும் பகுத்தறியவல்ல என் நெஞ்சம், இங்கே இன்ன தென்று துணிய முடியாமல் மயங்குகின்றதே!

(பதவுரை) அணங்கு கொல் = (இஃது ஒர்) தெய்வப் பெண்ணோ? ஆய்மயில் கொல்லோ = ஆய்ந்து தேர்ந்தெடுக் கத்தக்க மயிலே தானோ? கனம் குழை = கனத்த தோடு (காதணி) அணிந்த, மாதர் கொல்-மனிதப் பெண்ணோ? என் நெஞ்சு மாலும்=(எதையும் துணிய வல்ல) என் மனம் (இதைத் துணியமாட்டாது) மயங்குகிறதே! அணங்கு= தெய்வப்பெண்; குழை=காதணி, மாலும்=மயங்கும்)

மணக்குடவர் உரை:- இக்கணங்குழையை யுடையாள் தெய்வங் கொல்லோ! நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி மக்களுள்ளாள் கொல்லோ? என் மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?