பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஆழ்கடலில்


ஆதலின், அவன் இறை எனப்பட்டான். அரசன் என்பவனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத் தகுதிகள் 'இறைமாட்சி' என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை வருமாறு:

அரசருள் ஏறு

(தெளிவுரை) படை, குடிமக்கள், உணவுப்பொருள், அமைச்சர், நட்பரசர், பாதுகாப்பிடங்கள் ஆகிய ஆறும் குறைவின்றி நிறைவு பெற்றிருப்பவனே அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி) ஆவான்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(பதவுரை) படை = {வன்மைவாய்ந்த) படைகளும், குடி = (உயர்ந்த) குடிமக்களும், கூழ் = சிறந்த உணவுப் பொருளும், அமைச்சு = (மதி நுட்பம் மிக்க) அமைச்சர்களும், நட்பு = (உண்மையான தூய) நட்பரசர்களும், அரண் = (அழிக்கமுடியாத) பாதுகாப்பு இடங்களும் ஆகிய, ஆறும் உடையான் = ஆறு பொருளையும் தன் உடைமையாகப் பெற்றிருப்பவனே, அரசருள் ஏறு = அரசர்களுக்குள் எல்லாம் ஆண் சிங்கம் போல் தலைமை பெற்ற அரசன் ஆவான். (கூழ் = உணவு; அரண் = பாதுகாப்பு இடம்; ஏறு = ஆண் சிங்கம்.)

(மணக்குடவர் உரை) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்னும் ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான்.

(பரிமேலழகர் உரை) படையுங் குடியுங் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்று சொல்லப்பட்ட ஆறங் கங்களையு முடையவன் அரசருள் ஏறு போல்வான்.