பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

43


தன் கீழ் உள்ளார்க்கும் எளிய இரவலர்களுக்கும் ஏற்ற உதவிகளைச் செய்தலாம். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலிருந்து ஆதாரமும் அங்குக் காட்டியிருக்கிறேன். அடுத்தது அறிவு, ஒருவன் ஒழுங்காகக் காரியம் பார்க்கவில்லையென்றால் - நடந்து கொள்ளவில்லையென்றால், "உனக்கு அறிவு இருக்கிறதா?" என்று கேட்பது உலகியல். அரசனுக்கு இது மிக மிக வேண்டுமே! இறுதியாக ஊக்கம், ஆக்கத்திற்குக் காரணமான ஊக்கத்தைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ?

இந்நான்கும் அரசற்குச் சில நாள் சிலவேளை இருந்தால் போதாது; எஞ்ஞான்றும் எஞ்சாது நின்று நிறைந்து நிலைத்திருக்க வேண்டும்; அதுதான் அரசற்குத் தகுதி!

அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
துறந்தார் முதலோர்க்குத் துணை
"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை"

(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன். துறந்தார்க்கும் - (பற்றுக்களைத் துறந்த பெரியாருக்கும். துவ்வாதவர்க்கும்--(ஏழமையால் எவ்வித இன்பத்தையும்) அனுபவிக்கமுடியாத ஏழை எளியவருக்கும், இறந்தார்க்கும் - (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங்களுக்கும்.) துணை - (தக்க) துணையாவான்,