பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஆழ்கடலில்



என்ன? பெற்றோரையே பேதுற-மயங்கச் செய்கின்றனரே! இதுதானா இல்வாழ்க்கையின் இலக்கணம்?

மேலும் பரிமேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பயனாகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும். ‘பண்பும் பயனும் அது’ என்பது குறள். ‘அது’ என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண்பும் அச்செயல்தான்-பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமேயானால், “பண்பும் பயனும் அவை” என்று பாடியிருப்பார். அன்பு இலக்கணமாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனாகும்போது, அன்பு மட்டும் பயனாகாதா? ஆகுமே! ஆய்க அறிஞர்.

காமத்துப்பால்

களவியல்-தகையணங் குறுத்தல்

கொடும் புருவக் கோட்டம்

(தெளிவுரை) இந்தப் பெண்ணின் பொல்லாத புருவங்கள் கோணி வளைந்து கண்களின் மேல்புறம் செல்லாமல் ஒரே நேர் நெட்டாய்க் கண்களினூடே சென்று திறக்க வொட்டாதபடி அவற்றை மறைத்திருக்குமாயின், அக்கண்கள் இப்போது எனக்கு இவ்வளவு துன்பம் செய்திருக்க மாட்டா.

“கொடும்புருவங் கோடா மறைப்பின் கடுங்களுா
செய்யல மன்னிவள் கண்”