பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஆழ்கடலில்


அதனை முற்றும் மறைத்துவிட வேண்டும் என்பதற்காக 'மறைப்பின்' என்றார்.

புருவத்துக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு வில்லுக்கும் அம்புக்கும் உள்ளது போன்றதாம். புருவ வில்லிலிருந்து கண்ணம்பு பாய்ந்து தாக்குகிறது. அதற்கு ஆற்றாது நடுங்குகிறான் அவன். அதனால்தான் 'நடுங்கு அஞர்' என்றார். அடுத்த குறளில் 'ஓ' என்று அலறி அழவே போகிறான் தலைமகன்). 'வில் வணக்கம் தீங்கு குறித்தமையான்' என்று வள்ளுவர் மற்றோரிடத்தில் கூறியுள்ளபடி. வில் வளைவின் நோக்கம் பிறரைத் துன்புறுத்தலே. வஞ்சகர் நல்லவர்போல் வளைந்து கொடுப்பதும் பிறகு துன்புறுத்தவே, இந்தக் கொடும் புருவத்தின் கோட்டமும் அதுவே தான். அதனால்தான் அவன் நடுங்குகிறான், என்ன செய்யுமோ என்று! புருவமும் கண்ணும் ஒன்றுக்கொன்று தோழமை பூண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதாக இவ்வளவு நேரம் பேசினோம். இஃது உண்மையா? இஃதோர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! இதுபோலவே அம்பிகாபதி கோவையிலும் ஓர் ஒற்றுமைக் கருத்து உள்ளது; ஒருத்தியின் கண்கள் ஒருவனைக் கண்டன . காதல் பிறந்தது. காதலராயினர். பின்னர் பிரிந்தனர். பிரிவு தாளாது தலைவியின் உடல் சோர்ந்தது. கைகள் மெலிந்தன. அதனால் வளையல்கள் கழன்றன. வளையல் இழந்த கைகளைக் கண்கள் கண்டு, ஐயோ நமக்கு மை பூசிய கைகளாயிற்றே! நாம் தலைவனை முதல் முதல் கண்டதனாலல்லவோ, இவ்வாறு நேர்ந்தது என்று அழுதனவாம், அதாவது, தலைவனைப் பிரிந்த துயரால் தலைவி அழுதாள். அதனை இங்ஙனம் கற்பனை செய்து விட்டார் புலவர், இதனை,

"பண்டு நமக்குப் பரிந்துமையூட்டிய பங்கயக்கை
ஒண்டொடிசோர உயங்குத னோக்கித் தயங்குமுது"