பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

79


போதுமா? அவற்றை இரண்டு கால் செல்லுகள்' அரித்து விடாதபடி, 'ஏறப் படித்த எலிகள்' இழுத்துக்கொண்டு போகாதபடி, 'பதவிப் பூனைகள்' பாய்ந்து பறிக்காதபடிக் கட்டிக்காக்க வேண்டும். காக்கிறேன் என்று காத்துக் கொண்டேயிருந்து விடக்கூடாது. அப்பொருளுக்காக மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அனைவர்க்கும் - அனைத்துக்கும் போதிய அளவு பகிர்ந்தளிக்க வேண்டும். அவ்வாறு செய்யின் அரசன் என்றால் அரசன் தான்! ஆட்சி என்றால் ஆட்சிதான்!

(ஆராய்ச்சி உரை) இயற்றல் என்பது யாது? பொருள் வருதற்கான ஆக்க வேலைகளைப் புரிதல்தான் இயற்றல், அவையாவன:- பகைவரை வென்று பறிக்கும் பொருளுக்கும், சிற்றரசரிடமிருந்து பெறும் கப்பப் பொருளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான். காலம் மாறிப் போயிற்றல்லவா? அடுத்து, வரிப்பொருளும் சுங்கப் பொருளும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவே! இதற்கு அரசனது முயற்சி அவ்வளவாக வேண்டற்பாற்றன்று. பின் அரசன் ஆற்றவேண்டிய ஆக்கவேலைதான் என்ன? உணவுப்பொருள்கள், சுரங்கப்பொருள்கள், தொழிற் சாலைப் பொருள்கள் முதலியவற்றை மிகுதியாக உண்டு பண்ணுவதின் வாயிலாகவும் அவற்றை விற்கும் வாணிகத்தின் வாயிலாகவும் நாட்டில் பெருஞ்செல்வம் கொழித்துச் செழிக்க வேண்டும். அதற்கு ஆவன புரிதலே இயற்றுதல்.

ஈட்டல் என்றால், வேற்கூறிய பல வழிகளிலும் பல்வகைப் பொருள்களை மிகுதியாகத் திரட்டிச் சேர்த்தல். இங்கே கூர்ந்து கவனிக்கவேண்டும். ஈட்டம் என்றால் கூட்டம் - மிகுதி என்று பொருள். பொருள் வரும் வழிகளும் பல; ஒவ்வொரு வழியிலும் வரும் பொருள்களின் வகைகளும் பல; ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு