பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

91


தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு - சேலை கட்டிய உருவங்களின் பின்னே மோப்பம் பிடித்துத் திரிந்து வெம்பிப்போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னோர்க்குக் காதலைப்பற்றி நினைக்க உரிமை ஏது?

இந்தக் குறளில் 'நண்ணாரும்' என்ற சொல்லுக்கு, 'போர்க்களத்தில் வந்து நண்ணாத-சேராத பகைவர்' எனப் பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள் கூறுதல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ்வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், நண்ணாரும் (நண்ணார்+உம்) என்பதில் உள்ள 'உம்' மை 'இறந்தது தழுவிய எச்ச உம்மை' எனக் கொண்டதுதான். 'அண்ணனும் - வந்துவிட்டார்' என்றால், இதற்குமுன்பு இன்னும் யாரோ வந்திருக்கிறார் என இறந்துபோன - அதாவது நடந்துபோன, எச்சமாய் உள்ள - அதாவது மறைந்திருக்கிற மற்றொரு கருத்தையும் தழுவுகிற 'உம்' தான் 'இறந்தது தழுவிய எச்ச உம்மை (உம்)' எனப்படுவது. எனவே நண்ணாரும் அஞ்சுவர் என்றால், இன்னும் யாரோ அஞ்சியுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வந்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் 'நண்ணார்' என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, நண்ணுபவர்.- நண்ணாதவர் என்றால், போர்க்களத்தில் வருபவர்- வராதவர் எனல் தமிழ் மரபு அன்று . நண்ணுபவர்- நண்ணாதவர் என்றால், வந்து நட்பு கொள்பவர்-கொள்ளாதவர் எனலே சரி.

எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான் - அவ்வாறு அஞ்சுபவன் பகைவனாகமாட்டான். தன்னால் முடியாவிட்டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே