பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஆழ்கடலில்


பிடித்த யானையின் மத்தகப்பகுதியில் அணிந்துள்ள கட்படாம் போன்றுள்ளது.

"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில்'"

(பதவுரை) மாதர் = இந்தப் பெண்ணுடைய, படாஅ முலைமேல் துகில் = சாயாத கொங்கைகளின்மேல் அணிந்துள்ள (மாராப்புத்) துணியானது, கடாஅ = மதமுடைய, களிற்றின்மேல் = ஆண் யானையின் மேல் அணிந்துள்ள, கட்படாம் = கட்படாம் போன்றுள்ளது.

(மணக்குடவருரை) மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும், மாதரே, நினது படாமுலை மேல் இட்ட துகில்.

(பரிமேலழகருரை) இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலின், கொல்ல தாயமதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை யொக்கும்.

(விளக்கவுரை) சுடாம் = மதம்; களிறு = ஆண்யானை; கட்படாம் = யானை முகத்தில் - கண்பகுதியில் அணியும் உடை; படுதல் = சாய்தல் - படா = சாயாத - தளராத; துகில் = மெல்லிய பருத்தியாடை. கடாஅ, படாஅ என்னும் உயிர் அளபெடைகள், யானையின் மதத்தின் மிகுதியையும் கொங்கையின் தளராத உறுதியையும் உணர்த்துகின்றன. ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை வரையும் ஓவியப் புலவன், கொங்கைகளுக்கு என்ன தோற்றம் கொடுக்கிறானோ, அதே தோற்றத்தைத்தான் புலவர்கள் இலக்கியங்களில் சொற்களால் புனைகின்றனர். சிற்பமும் இப்படித்தான். எனவே, இது போன்ற இலக்கியப் பகுதிகளைக் கலைக்கண்கொண்டு கற்றலே நன்று! காமக் கண்கொண்டு கற்கவேண்டா! இதனை இதோடு நிறுத்திக்கொள்வோம்.