5.நாடும் மக்களும் நலம் பெற
110
ஆழ்வார்களைப் போலவே பாரதியும் கண்ணனிடம் அளவற்ற பக்தி கொண்டு கண்ணனிடம் ஐக்கியமாகி ஒன்றி விட்டார். ஆழ்வார்களின் மரபில் வந்தவர் பாரதி, ஆயினும் பாரதி தனது காலத்திற்கேற்ற வகையில் புதிய நெடிது நோக்குடன் கூடிய குறிக்கோள்களுடன் தனது பாடல்களில் புதிய கருத்துக்களையும் லட்சியங்களையும் முன் வைத்துள்ளார்.
பாரதி தனது சுய சரிதைப் பாடலில்,
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனி யரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருள்வாய்
குறிகுணமேதுமில்லா தாய் அனைத்தாய்க்,
குலவிடும் தனிப்பரம் பொருளே!
என்று பாடுகிறார். இதுவே அவருடைய தத்துவ நிலையாகும். ஆழ்வார்களுக்கும் பாரதிக்கும் இந்தத் தத்துவநிலையில் ஒரு ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இந்திய நாட்டின் இந்தியத்வத்தின் பண்பாட்டு தளத்திற்கும் இதுவே ஆதாரம். கீதையின் இரகசியமும் இதுவே.
கலி நீங்க
கலி நீங்க வேண்டும் என்றும் சத்தியயுகம் - கிருத யுகம் எழ வேண்டும் என்றும் ஆழ்வார்களும் பாரதியும் விரும்பினார்கள். இதைப் பல பாடல்களிலும் ஆழ்வார்களும், பாரதியும் பாடியுள்ளதைக் காண்கிறோம்.