அலைவதில் இன்பம்
கங்குலில் ஒருநாள் கவினுறும் ஆற்றங்
கரையிலே காட்சிகண் டிருந்தேன்.
சங்கொலிப் பதுபோல் ஆழ்மனத் துள்ளே
சலிப்பெனும் கடல்நெளிந் துலுக்கும்.
கங்குல்அஃ தமைதி கலந்திடும் நேரம்
கலிப்பிலா தாறுமே கடக்கும்,
அங்குநல் அமைதி இலாதபல் அலைகள்
தூளியில் குழந்தைபோல் ஆற்றின்
பங்குள ஆற்றுப் படுகையில் உறங்கிப்
பாட்டிசைப் பொருளென விளங்கும்.
கங்குலில் கண்ணில் தென்படா ஆற்றல்
கலகலப் பறவைகள் தம்மை
எங்குமே சிறைப்பட் டிருந்திடும் கூட்டில்
யாவுமே அமைதியில் கிடக்கும்.
மங்கிய விண்மீன் வெண்ணிலா அணிந்த
மாலையாய்க் கோப்பினில் விளங்கும்.
இங்கெனில் நெஞ்சின் துடிப்பொலி எனக்கே
இடியென ஒலித்திடும் பெரிதாய்,
திடீரென இந்த உலகினை அளக்கும்
தெளிந்த முன்காணியைக் கண்டேன்.
படீரென முதுமை இடையிலும் இளமைப்
பாங்கினைக் காலையாய்க் கண்டேன்.
அடேஎனக் குரலை கொடுத்தஅப் பெரியார்
'அகக்கண்ணைத் திறந்திடு பார்பார்
விடேல் அதோ வைய விதியினை மறைத்த
வெறும்திரை அகன்றது காணாய்.
அடேஅடே வாழ்க்கை அலைவதில் இன்பம்
அறிந்தெழு” என்றனர் அவரே.
107