மொழுகுத்திரியும் பாவலனும்
நான் எரிகின்றேன்;
ஏன்எனில், எரிவது என் இயல்பு.
மின்மினி நீயோ வெளிச்சம் தருகிறாய்;
விட்டில்கள் உன்னை விரும்பிக்
கட்டுப் பாடிலாக் காதலில் கலப்பதெங்ஙனம்?
* * * * *
உள்ளத்து உள்ளது உன்னுடைக் கோயில்;
எனினும், சிலைகளை இனிதுஎன வேட்கிறாய்,
பொறுப்பிலா வேட்கை கிறுக்குத்தனமே.
நின்றன்
அரண்மனை இருந்தோர் ஆட்டனத்திஎழல்
முடியா ஒன்று.
நின்றன் பாலைவனம் குறுகிய ஒன்று.
நின்றன் தொட்டிலில்
ஆதிமந்தி காதல்கொண்டு எழுவளோ?
எனினும், இரவின் இருளில்
நம்பிக்கை ஒளி எம்பி எழுகின்றது.
பெற்றுக் கொள் இதை - மீண்டும்
அஃதோர் அரும்பெரும் செல்வம்;
உன்னுடைய உள்ளம் உனக்கே
மாறாய் இருப்பின் வாழ்க்கை சீர்ப்படுமா?
* * * * *
ஏஏ! யாரைத் தேடிநீ அலைகிறாய்
நீயே வழி, ஆம்;
நீ வழிப்போக்கன், நீ வழிகாட்டி;
நீயே வாய்த்த குறிக்கோள் ஆவாய்!
91