பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இப்படி ஒரு விளம்பரத்தை அங்குக் காண முடியாது. இந்த விளம்பரம் தேவைதானா? ஏன் இந்தப் பொறுப்பு உணர்ச்சி நமக்கு உண்டாகவில்லை. செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போவான் என்று கடவுள் மீது பாரம் போட்டுக் கடமை செய்யும் நாடு இது, இங்கே பயம் அதிகம்; பிறக்கும் குழந்தைகளுக்கு உறுதியான பாதுகாப்பு இல்லை. அதனால் இளமை இருக்கும்போதே இரண்டு மூன்று பெற்றுப்போட்டு விட்டால் நல்லது என்ற நினைப்பு எழுந்துவிடுகிறது, பெண் என்றால் அவள் தாயாக வேண்டும். அதுவே அவள் வாழ்வின் பயன் என்ற நம்பிக்கையில் ஊறி வந்துவிட்டோம். அதையும் கடந்து அவள் வாழ முடியும் என்ற நிலைமை இங்கு உருவாகவில்லை. அங்கே அவர்கள் எப்பொழுது குழந்தை வேண்டும் எத்தனை வேண்டும் என்று திட்டமிட்டே தாம்பத்திய வாழ்க்கையை நடத்துகிறார்கள், குடும்பக்கட்டுப்பாடு முறை அவர்கள் வாழ்வின் நடைமுறைகளில் ஊறிவிட்டது. இங்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ‘ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன்’ என்ற சித்தாந்தம் தலையெடுக்கிறது. அடுத்தது ஆண் பிறக்கும் என்ற நம்பிக்கை இனவிருத்திக்குத் துணை செய்கிறது. அங்கு ஆண் பெண் இருவரும் சமம். பெண் பிறந்துவிட்டால் வருந்தும் நிலை இல்லை.

மொழிப் பிரச்சனை

இங்கிலாந்து முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது, கவிஞர்கள் வளர்த்துத் தந்த மொழி இன்று கல்விக்கும் வாழ்வுக்கும் முழுவதும் பயன்படுகின்றது. அது இன்றைய உலக மொழியாக மாறிவிட்டது. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மொழி ஒரு சிக்கலாக அமையவில்லை. பேசுவதும் படிப்பதும் அறிவதும் அனைத்தும் ஆங்கிலமே. இது ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு தேசமும் தனித்தனி மொழிகளை ஆள்கின்றன. ஜெர்மனி