பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

இங்கேயும் இந்தப் புதுமை, விடுதலை வேட்கை புகுந்துள்ளது. முதல் முதலில் தனக்கு முதல் எதிரியாக மருமகள் மாமியாரைக் கருதுகிறாள். ‘கணவன் தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுகிறாள். தாயின் தனையன் பழக்க தோஷத்தால் அவன் அம்மா என்று கூப்பிடுவது அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை; வழிபாடு மாறவேண்டும் என்று நினைக்கிறாள். வந்தவளுக்கு வாழ இடம் தந்துவிட்டு இருந்தவள் இருந்த இடம் தெரியாமல் மறைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். “மாமியார் மெச்சிய மருமகளும் இல்லை; மருமகள் மதித்த மாமியாரும் இல்லை” என்பது இந்த நாட்டுப் பழமொழிகள்.

அங்கு மணமானதும் மகனைப் பிரிகிறாள் தாய்; வழி அனுப்புகிறாள் தங்கை. பெண்ணை வீட்டில் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்த்த தாய் “யாழ் இசையில் பிறந்தாலும் அந்த இசை யாழுக்குப் பயன்படாது: மலையிலே மணிகள் கிடைத்தாலும் அவை மற்றைய இடத்துக்குச் சென்று அணிகள் செய்யப் பயன்படுகின்றன. சந்தனம் காட்டிலே பிறக்கிறது. அது கல்லிலே உரசப்படுகிறது; அது பூசிக்கொள்பவர்க்கே பயன்படுகிறது. பெண்ணும் அப்படித்தான்.” அவனை அவள் அடைகிறாள்; அங்கே அவளைப் பெற்ற தாயும் தந்தையும் வாழவிடுகிறார்கள்; சுதந்திரப் பறவையாகிறாள்; பிரிவு அவர்களை வேறுபடுத்துகிறது. அவர்கள் வாழ்வில் இணைகின்றனர்.

அங்கே அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவனை அவளுக்குப் பிடிக்காவிட்டால் எந்த நேரமும் அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடைகட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவளும் அவனோடு முரண்பட்டால் காலத்துக்கும் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கும் இல்லை. இதனால் ஒருவரை