பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 28 —

உணர்வு எழுச்சிகளையும் ஆற்றிக் கொள்கின்றனர். அடுத்து, ஊழல் மலிந்ததும், உலுத்தர்கள் நிரம்பியதும், அரம்ப மாக்கள் நிரம்பப் பொருள் இரைத்துத் திறம் பெறாது உள்ளம் இழிந்ததும், வரம்பிலாக் கயமை நிறைந்ததுமான இக்கால அரசியல் ஒப்போலைக் களங்களை நம்பியும் தேசிய இன விடுதலையைத் தமிழினம் பெற்று விட முடியாது; அந்த முயற்சியைத் தள்ளிப் போடவும் முடியாது.

எனவே, உண்மையான தமிழின மறுமலர்ச்சிக்கும், உரிமை மீட்புக்கும், முழு இறையாண்மை பெற்ற தன்னுரிமைத் தமிழ் நாட்டு அமைப்பிற்குமாக, உள்முனைப்பும் உறுதிவேகமும் கொண்டு, இற்றைச் சூழ்நிலைகளை முறியடித்து, வெற்றிப் பாதையை உருவாக்கிக் கொடுக்கும் பொதுமக்கள் புரட்சி ஒன்றே கால்கொண்டு எழுச்சி பெறுதல் வேண்டும். ஆனால் அடிமை உணர்வும், சாதி, மத வெறியுணர்வுகளும், அறியாமையும், ஏழைமையும் நிறைந்த இன்றைய பொது மக்களிடம் இவ்வினப் புரட்சி கால் கொள்ளுமா, எழுச்சி பெறுமா என்பதும் ஓர் ஐயமே.

இளைஞர்களின் எழுச்சிக் கூறுகள்:

இனி, இதற்கு நேரம் மறுதலையானதும், இளைஞர்கள் சிலரின் உள்ளத்தே முகிழ்த்து வருவதுமான கருவிப் புரட்சி என்பது, உலகின் இன்றைய வரலாற்று வளர்ச்சி நிலைகளுக்கும், போர் அறிவியல் வளர்ச்சி முதிர்வுகளுக்கும் பொருந்தி வரும் என்று நினைப்பதற்கு இயலவில்லை. இளைஞர்களின் கைகளில் கிடைக்கும் கருவிகளைவிடப் பன்மடங்குப் புதினமும், வலிவும், மிகுதியுமான கருவிகள் ஆட்சியதிகாரக்காரர்களின் கைகளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டன்றோ ? அதனால் மிகுதியான உயிர் அழிவுகளுக்கும், கால நீட்டிப்புக்குமே இடனுண்டு.

ஆகவே, இராசீவ் போலும் அரசியல் அழிம்பும், வஞ்சகமும், பதவி வெறியும், பகட்டு ஆரவாரமும் கொண்ட