பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 33 —

தண்டிக்கவோ, நடுவணரசை ஆட்சி செய்யும் பேடிகளால் முடியவில்லை; இதைக் கண்டிக்கவோ எதிர்த்துக் குரல் கொடுக்கவோ மாநிலத் திருடர்களின் ஆட்சிகளால் முடியவில்லை; ஆனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட சேதங்களையும் இழப்புகளையும் மதிப்பிட்டு இழப்பீடு தருவோம் என்று பெட்டைப் பெருமையாக அறிவிக்கின்றனர். இவ் வெட்கங்கெட்ட வீணர்களை நம்பியிருப்பதை விட, அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதை விட - தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனித் தமிழ்நாட்டை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்வதில் என்ன தவறு நேர்ந்துவிடும்?

எனவே, தமிழர்களுக்கு முழு இறையாண்மையுள்ள ஒரு தனி நாட்டின் தேவை இந்திரா, இராசீவின் மறைவுக்குப் பின்னர், நாளுக்கு நாள் மிகுந்து கொண்டே போகின்ற உண்மையை, இனிமேலாகிலும், அரசியலில் புகுந்து எதையோ விளைவிக்கப் போவதாகக் கூறிக்கொண்டிருக்கும் தமிழின அரசியல்காரர்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டுச் சிறிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வுணர்வுக்குத் தமிழீழப் போராளிகளின் துணை நமக்குக் கிடைத்தாலும் அதில் தவறில்லை என்று நாம் கருதுகின்றோம். ஏனெனில் பங்காரப்பாவைவிட, நரசிம்மராவைவிட, செயலலிதாவைவிட, தமிழீழ போராளிகளோ, பிரபாகரனோ கொடியவர்கள் இல்லை. இவர்களை நம்பி நாம் உயிர் வாழ்வதைவிட, அவர்களை நம்பி உயிர்ப் போராட்டம் —விடுதலைப் போராட்டம் நடத்தி உயிரிழப்பது மேல்! மேல்!! மேல்!!!


உரிமைக் கதவை, அவ் வொருநாள் வரும்வரை
உரத்த கைகளால் ஓங்கித் தட்டுவோம்!
நரிமைக் கயவர்கள் திறவா விடில், அதை
நானூறு சில்லுக ளாய் உடைத் தெறிவோம்!