பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்



ஆனால், டாக்டர் வரதராசுலு அக்காலத்திலேயே, அதாவது 77 ஆண்டுகளுக்கு முன்பேயே, ‘அருவி’ என்ற அருமையான தமிழ்ச் சொல்லை water-Falls என்ற இங்லீஷ் சொல்லுக்காக மொழி பெயர்த்தார் என்றால், அந்த தமிழ்ப் பெருமகனுடைய தமிழ்வேட்கையை எவ்வாறு பாராட்டி மகிழ்வது என்று இன்றைய பத்திரிகையாளர் தலைமுறைகள் சிந்திக்க வேண்டிய ஒன்றல்லவா?

தான் பயன்படுத்தும் கருத்துக்களை டாக்டர் வரதராசலு சுருக்கமாகவே கூறுவாராம். சொல்லில் சிக்கனம் காண்பவராம். அவர் தமிழ்நடையில் கோணல், வளைவுகள் இராதாம். குறிப்பான சொற்களையே பயன்படுத்துவாராம். ஆனால் தமிழ்நடை மட்டும் எடுப்பாகவும், கருத்துத் தெறிப்புக்களாகவும், தெளிவான புரிதல்களாகவும் இருக்குமாம். இவைதான் டாக்டர் நாயுடுவின் தமிழ்ப் பத்திரிகைப் பணி! இந்த அரிய முயற்சியை, பத்திரிகையாளர்களான நாமும் பயன்படுத்தலாம் அல்லவா?

டாக்டர் நாயுடு எழுதும்போது, இன்றைய சில பத்திரிகைகளைப் போல சட்டப் பயந்தாங்கொல்லித்தனமில்லாமல், அதாவது தெரிகிறது, புரிகிறது - கூறுகிறார்கள். பேச்சு அடிபடுகிறது என்று சுற்றி வளைத்து எழுதாமல்; முனைப்பாகவும் தைரிய உணர்ச்சியோடும், நேருக்கு நேராகவும் எழுத வேண்டும் என்று அவர் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை கூறுவாராம்.

‘படும்’, ‘பட்ட’ என்பவற்றைப் பாடுபட்டுப் பயன் படுத்துவதை ‘விடும்’ என்று அவர் கூறிய நல்லுரை, ஏற்றமிகு எழுத்துக்கு ஏற்ற இலக்கண விதியாக அமைந்ததோடு, செயப்படு பொருளாகச் சிறைப்பட்டுக் கிடக்காமல், செய் பொருளாக விழிப்புற்று எழச் செயல்வீரர்களைத் தூண்டும்’ என்று ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூல் கூறுகின்றதை இன்றைய இளம் பத்திரிகையாளர்கள் தலைமுறை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

டாக்டர் நாயுடு அவர்களின் பத்திரிகைத் தொண்டில் மிகச் சிறப்பானது எது தெரியுமா? அவரது ‘தமிழ்நாடு’ பத்திரிகையில்