பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



அமெரிக்காவில் இங்கர்சால் பேச்சுக்கு மட்டுமே அரங்கக் கட்டணம் உண்டு. அதுபோலவே ‘நா’ நயமும், ‘நா’ வளமும், ‘நா’ நலமும், கொண்ட அண்ணா அவர்கள் பேச்சுக்கு மட்டும் தான் தமிழ்நாட்டில் அரங்க விலை. அதாவது பேச்சுக்கு மக்கள் கட்டணம் வழங்கும் புதுமை முறை உருவானது.

அண்ணா மேடை உரைகள் நூற்களாயின; கட்டுரைகள் நூற்களாயின; நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், வரலாற்று ஆய்வுகள்; கம்ப இதிகாச தோல்விகள், வரலாற்றில் ஆரிய ஆய்வுக் களங்கள், புராண, மத, எதிர்ப்புகள் எல்லாமே நூற்களாயின. திராவிட பவனி வந்தன.

இந்தி எதிர்ப்புப் போர், சாதி ஒழிப்புப் போர், இதிகாச எதிர்ப்புப் போர், அரசியல் எதிர்ப்புப் போர், இலக்கிய எதிர்ப்புப் போர், வரலாற்று எதிர்ப்புப் போர், திரையுலக மறு மலர்ச்சிப் போர் போன்ற பலப் போர்களைத் தனது அறிவாயுதங்களால் களம் கண்டு பரணி பாடிய அறிவுமானி அண்ணா!

இறுதியாக 1957-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களாட்சிப் போரில் வாகைச் சூடி, முதல்வராகி தமிழ் மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டி மறைந்த மான உணர்ச்சி மறத் திராவிடர் தளபதி அண்ணா! பத்திரிகை உலகில் அவர் வகுத்த எழுத்து வியூகங்களை எவராலும் மறக்க முடியாத அரிய தொண்டுகளாகும்.

பாவேந்தரின்

புதுவைக் ‘குயில்’

புரட்சிக் கவிதைகள் புனைந்து புகழ்வானில் புதுவைக் குயிலாகச் சிறகடித்து பறந்த சமூக சீர்த்திருத்தக் குயில் பாவேந்தர் பாரதிதாசன்.

ஆரம்பத்தில் கனக சுப்புரத்தினம் என்று பெற்றோரிட்ட பெயரில் வளர்ந்து, படித்த பாவேந்தர், கதர் துணிகளை விற்றக் காங்கிரஸ்காரர். மைலம் மலையில் வீற்றுள்ள முருகப் பெருமான் மீது சுப்பிரமணியர் துதியமுது பாடி பராவியவர்: இத்தகைய ஓர் ஆன்மிகப் பக்தரான கனகசுப்புரத்தினம், 1928-ஆம் ஆண்டில் பாரதியாருக்குத் தாசனாக மாறி பாரதிதாசன் ஆனாா.