பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

141



புனித ஆத்திகராக நடமாடியவர், புதுமையான நாத்திகராகி, கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை நாத்திக வாதத்தை எதிர்த்து, “இல்லை என்பான் யாரடா? தில்லையைப் போய் பாரடா!” என்று தேசிய பத்திரிகை ஒன்றில் எழுத, உடனே பாவேந்தர் பாரதிதாசன் தனது ‘குயில்’ பத்திரிகையில், ‘இல்லை என்பேன் நானடா - அத்தில்லை கண்டு தானடா!’ என்று எதிரடி கொடுத்த சீரம் பழுத்த நாத்திகக் கவிஞராக நடமாடியவர்!

‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ கலந்து கொள்ள வாருங்கள் நாட்டினரே’ என்று,அண்ணல் காந்தி சுதந்திர அறப்போருக்கு நாமக்கல்லார் அழைப்பு விடுத்துக் கவிதை பாடியபோது, அந்த அரசியல் அழைப்பை அவமதிக்காமல் பாவேந்தர் சமுதாய விடுதலைக்கு அழைப்பு விடுத்து மக்களைத் திரட்டினார்! அப்போது அவர், ‘கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே, குகை வாழ்வொரு புலியே உயர் குணமேவிய தமிழா! என்று, சமுதாய விடுதலைக்கு முரசு கொட்டி அழைத்தவர் பாவேந்தர்!

“பார்ப்பனீயம் மேலென்று சொல்லிச் சொல்லி
பழையயுகப் பொய்க்கதையைக் காட்டிக் காட்டி,
வேர்ப்புறத்தில் செந்நீரை வார்த்து வார்த்து.
மிகப் பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கிவிட்ட
செயல் அறிந்து திடுக்கிட்ட வீரா!

என்ற இனமானக் கவிதையைத் திராவிட இனப் பெயருக்காக எழுதிய மானமிகு கவிஞர் பாவேந்தர்!

‘நாளுக்கு நாணம்’ என்ற கவிதையைக் ‘குடி அரசு’ பத்திரிகையில் பாவேந்தர் 10.3.1929ல் எழுதியபோது,

“எங்கள் நிலையில் ஈனத்தைக் காண
உள்ளம் நாணியோ
உன்றன் ஒளியிற் குன்றிக்குன்றி மேற்றிசை
சென்றிடு கின்றாய்’

என்று சூரியனை நோக்கிக் கேள்வி கேட்பவர் யார் தெரியுமா? பாவேந்தர் பாரதிதாசன்தான்.