பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



‘குயில்’ என்ற பத்திரிகையைப் புரட்சிக் கவிஞர் புதுவையிலே கூவிக் கூவி நடத்தினார்! அந்த ஏடு 1946-ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு விட்டது. என்றாலும், மீண்டும் அந்தக் குயில் தமிழ் மக்களிடையே புரட்சிக் குரல் கொடுத்துக் கூவியது.

‘முன்னேறும் திறம் வேண்டும்
மொய்ம்பேறும் தோள்கள் வேண்டும்
தன்மானம் நாம் பெறவேண்டும்!
வேறென்ன வேண்டும்?

என்ற சுயமரியாதை சித்த மருந்தைப் பாவேந்தர் தனது கவிதைத் தேனில் கலந்து திராவிட இனத்துக்குப் புகட்டியதை தமிழ்ப் பத்திரிகை உலக எழுத்தாளர்களால் மறக்க முடியுமா?

கனக சுப்புரத்தினம் எழுதிய, ‘எங்கெங்கும் காணினும் சக்தியடா’’ என்ற முதல் கவிதையை, பாரதியார் கவிதா மண்டலம் என்ற தலைப்பிட்டு, மகாகவி பாரதியார் ‘சுதேச மித்திரன் தேசிய தின ஏட்டுக்கு அனுப்பிப் பாரதிதாசனுக்குப் புகழைத் தேடி தந்தார்! பாரதியாரும் தனது மாணவரின் வித்தகக் கவிதையால் புகழ் பெற்றார! இது கவிதை வரலாறு.

சுயமரியாதை இலக்கிய வரலாற்றில் பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு மரபை உவமைக் கவிஞர் சுரதா போன்ற மானமிகு மாணவர்களால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வருவது தான் பாவேந்தர் பாடுபட்ட திராவிட இனமான உணர்ச்சி, புரட்சி என்பதை நம்மால் மறக்க முடியாது. திராவிடரின் பத்திரிகை உலகில் பாவேந்தர் தமிழ்த் தொண்டு வளையா வானமாக படர்ந்துள்ளது.

நாகர்கோயில்

‘தமிழன்’ இதழ்

அன்றைய திருவாங்கூர் அரசுக்குட்பட்ட குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து, ‘தமிழன்’ என்ற பத்திரிகையை நடத்தியவர் சிதம்பரம் என்ற வழக்கறிஞர். இவர் ஈரோட்டில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாநாட்டின் இளைஞர் அணிக்குத் தலைமை ஏற்றவர்.