பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

151



காந்தி பஜனைகளில் மூழ்கி, சுயமரியாதை ஊர்வலம் வந்து, பொதுவுடைமைத் தத்துவத் தலைவராக வீற்றிருந்து பத்திரிகையிலே அரிமா பலத்தோடு தனது எழுத்தாண்மையைக் காட்டி, மேடைகளிலே கர்ஜனை முழக்கங்களிட்டு வந்த ஜீவா, என்ற நாஞ்சில் சிங்கம் செய்த ‘ஜனசக்தி’ புதையல் தொண்டுகளைத் ‘தாமரை’ மலரிலே ஏந்தி நின்று நாமும் நமது பத்திரிகைகளிலே வழிபாடுகள் செய்யலாம் இல்லையா?

‘தீப்பொறி’

சிற்றரசு

‘சிற்றரசு என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்றீரே எந்த நாட்டுக்கு நீர் சிற்றரசு?’ என்று ஒருவர் சிற்றரசு பேச எழுந்த வேலூர் பொதுக்கூட்டம் ஒன்றில் கேட்டார். அதற்கு அவர், ‘இராசகோபலாசாரியார் எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தியோ, அந்த நாட்டுக்கு அடுத்த நாட்டிலே நான் சிற்றரசாக இருக்கின்றேன்’ என்றார்! வினா விடுத்தவன் விலா ஒடிந்து வீழ்ந்து அமர்ந்தான்! இராஜாஜியைச் ‘சக்கரவர்த்தி’ என்னும் பெயருக்கு முன்னால் குறிப்பிடுவதுண்டு. அதாவது சக்கரவர்த்தி இராஜகோபாலர்சாரி என்று!

சிந்தனைச் சிற்பி என்று திராவிடரியக்கத் தோழர்களால் பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட சின்னராசு என்பவர்தான், சிற்றரசு என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். எளிமையான பேச்சாளர்; ஆவேசமான எழுத்தாளர்; நகைச்சுவையோடு எதிரிகளைக் கிண்டலடிப்பவர். கூட்டத்து மக்களைக் கவர்ச்சித்துப் பேசும் பாணி அவரது பேச்சுப் பாணி ஆனால், எழுதுவதில் வன்மையான பேனா வீரர்!

தீப்பொறி, தீச்சுடர், இன முழக்கம் என்ற மூன்று வார பத்திரிகைகளை தி.மு.கழக வளர்ச்சிக்காக நடத்தி சிற்றரசு வெற்றி கண்டவர். அவர்தான் மூன்று ஏடுகளுக்கும் ஆசிரியர். அதுமட்டுமல்ல; ஏறக்குறைய 20 புத்தகங்களுக்கு மேல் எழுதிய சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.

1967-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் சட்டமன்ற மேலவைத் தலைவராக பணியாற்றியபோது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகச் சட்டப் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிட்னி நகர் சென்றார்.