பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


இடையே சுற்றுக்கனுப்பி சுயமரியாத உணர்வுகளைப் பரப்பிய திராவிடரியக்க இந்திரஜித்தாக வாழ்ந்தார்.

அன்று கலைஞர் கையேடாகத் துவக்கிய ‘முரசொலி’ 2005-ம் ஆண்டான இன்றுவரை தமிழ்நாட்டில் தமிழ் முரசு கொட்டி வருகிறது. அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ‘துள்ளிவரும் வேலாக, பகையை அள்ளி வரும் வாளாக’ திராவிடரியக்க வளர்ச்சிக்கு உதவுகின்றன.

கலைஞர் பத்திரிகை ஆசிரியர் மட்டுமன்று. சிறந்த புதுக் கவிதைச் சித்தர். சிறுகதை, பெருங்கதை, வரலாற்றாய்வுக் கதை, இலக்கியக் கட்டுரைகள் எழுதும் நாடக வித்தகர், சிறந்த நடிகர், திரையோவிய எழுத்துத் துறை முன்னோடி, புராண விமர்சகர், முத்தமிழ்க் கலை சொற்செல்வர். அரசியல் வெங்களத்தில் பலமுறை செங்களம் கண்ட செறுமுனை வேங்கை, மேடையிலே பூங்காற்றாகவும், புயலாகவும் மாறி, ‘நா’வை நர்த்தன மாட வைக்கும் நல்லாற்றல் நாயகர், அழிந்த தமிழர் வரலாற்றுச் சின்னங்களைப் புதுப்பிக்கும் தமிழ் நாகரிகச் சிற்பி. தன்னந் தனியாக, சினிமா தனி மனித பலத்தைப் பலமுறை எதிர்த்து தோல்வி கண்டாலும், துவளாத துணிவாண்மை அரிமா! அரசியல் நெருக்கடி நிலை வெள்ளத்திலே கழகத்தைச் சோழ சாம்ராஜ்யக் கோட்டையாகக் காத்திட்ட இராஜராஜ சோழனுக்கு மூலவித்து. தமிழைச் செம்மொழியாக்கிட தளராது உழைத்திட்ட மூவேந்தர் மரபாளர்; பெருந்தலைவருக்கும் பெருந்தலைவராய் விளங்கித் திராவிடர் ஆட்சிக்கு மானமூட்டியாக நின்று, கழகத்தைக் கபாடபுரமாக்காமல், தென் மதுரையாகாமல், கவின்புகாராக மூழ்காமல், அரசியல் சூது ஊழை உட்பக்கம் கண்டு வாகை சூடிய வளமார் திராவிட வரலாறாக இன்றும் வாழ்பவரான (20.11.04) கலைஞர் பெருந்தகை; பத்திரிகை உலகுக்கு ஒரு சான்றாண்மையாளராவார்.

அந்த முத்தமிழ் மாமேதை உருவாக்கிய ‘முரசொலி’ நாளேட்டில் இந்தப் புத்தக ஆசிரியரான புலவ என்.வி. கலைமணி ஏழு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றி ‘எரியீட்டி’ பத்திரிகையாளரானார் என்பதும் எனக்கோர் மகுடம் தானே!