பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

165



பேராசிரியர்

‘புது வாழ்வு’

திராவிடர் இயக்கத்தின் தோழர்கள் தமிழ் உணர்வுடைய பண்பாளர்களானதால் ஒவ்வொருவரும் சிறந்த சொற்பொழிவாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், கதாசிரியர்களாகவும், கட்சியை வளர்க்கும். கொள்கை வேளாளர்களாகவும், சினிமாத் துறையின் கதை-வசனம் பாடல் ஆசிரியர்களாகவும் இருந்தார்கள். எந்த ஒரு கட்சியிலும் இத்தகைய ஆற்றலாளர்களைத் தொண்டர்களாகக் காண முடியாது. திராவிடர் இயக்கம் ஒன்றுதான் இத்தனைத் துறைகளிலும் தனது இயக்கக் காளையர்களைப் பயிற்றுவித்த இயக்கமாக இருக்கின்றது.

பேராசிரியர் அன்பழகன் அந்த இயக்கக் காளையர்களுக்குப் பயிற்சித் தரும் நாவன்மையும், இலக்கியச் சிந்தனையும், அரசியல் வித்தகமும் அமைந்தவராகக் காட்சி தந்து வருபவர். அவர் மாணவப் பருவத்தில் ‘புதுவாழ்வு’ என்ற பத்திரிகையை நடத்தினார்! அவரது எழுத்தாற்றலால், அவரைப் பின்பற்றும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அமைதியே உருவான பேராசிரியர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். கலைஞர் அமைச்சர் அவையில் தொடர்ந்து கல்வி அமைச்சராகவே இருந்து வருபவர் நமது பேராசிரியர் ஒருவரே! அவரது ‘புதுவாழ்வு’ பத்திரிகையும் அமைதியான இலக்கிய ஏணியாக பலருக்கு உதவியது எனலாம்.

ப. கண்ணன்

‘பகுத்தறிவு’

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் என்ற நகரிலிருந்து ‘பகுத்தறிவு’ என்ற திங்கள் இதழைத் தொடர்ந்து நடத்தியவர் ஜலகண்டபுரம் கண்ணன். அமைதியான எழுத்தாளர்.

அவர் சுயமரியாதை இயக்கத்தவர் மட்டுமன்று; பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் அருமை பக்தர்.